புதன், 19 செப்டம்பர், 2018

கொத்தும் கருவிகொண்டு குழிமூடும் மூடர்கள்

கொத்தும் கருவிகொண்டு குழிமூடும் மூடர்கள்



உலகமதை ஆளும் எந்தத் தலைவனையும் கண்டால் - அவனிவ்
வுலகமதை மாற்றிவிடும் சக்தியுள்ளன் என்பான்
உலகமதில் நீதி நேர்மை அமைதி வேண்டும் என்றால் - அவனே
உலகமதில் தன்வழியே அதைஅமைக்கும் என்பான்

நல்வழியைக் காட்டவரும் மதங்களுக்குள் சென்றால் - எங்கும்
கள்வர்களும் பொய்யர்களும் கடையருமே நிற்பார்
சொல்வதிலும் செய்கையிலும் சரிவழியில் நின்றால்  - அவரை
பல்வகையும் பெயர்கெடுக்கும் கடையர்சூழு கின்றார்

சொத்தும் சுகமும் மட்டும் சேர்த்தல் இலட்சியமாய் வந்தார் – எங்கும்
தொத்தித் தொத்தி இடம்பிடிக்கும் பல்லியராய் நின்றார்
கத்திக் கத்திபொய்யை மெய்யாய் மாற்றுவரே எங்கும்     - இன்று
செத்தும் கெடுக்கும் அழுகியராய் அரசியலில் நின்றார்

கல்வியில்லா மடையராக ஏழை வைக்கவென்றும் - அவர்க்கு
சொல்லிநீதி கேட்கஉரிமை விதியிலில்லை என்றும்
தெய்வம்விதித்த விதியதென்றும் மாற்றலில்லை என்றும் - அந்த
தெய்வம்நம்பி இயங்கும்ஏழை எழுதல்தடுத்தல் நன்றோ?

சுயநலத்தைக் கொண்டசிலர் தாங்கள் உயர்ந்து வாழ – மக்கள்
சுயசிந்தனை தனைத்தடுக்க மதஉருவைத் தந்தார்
பேதங்களும் உரிமையற்ற அடிமைநிலையும் மட்டும் - என்றும்
வேதமாகப் பதிய வைத்துத் தம்மை உயர்த்தி நின்றார்.

புரிந்திடாது தொடருமெதும் அழிவைநோக்கிச் செல்லும் - என்று
புரிந்திடாது வாழும்மக்கள் காக்கப்படல் வேண்டும்
புதிய இளந் தலைமுறைக்கு உண்மைதெளிதல் வேண்டும். - இன்றேல்
புதியதான தட்டினிலும் நச்சுணவே சேரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக