திங்கள், 24 செப்டம்பர், 2018

விழிப்பாயிரு! விழித்துக் கொண்டேயிரு!



கடவுளைக்கூட கயவனாய் மாற்றும் சதியர்கள் வாழ்கின்ற காலம்
கடவுளின் பெயரால் ஏய்ப்பதும் கொள்ளை அடிப்பதும் இலகுவில் ஆகும்
கடவுளை வைத்தே கற்பனைக்கெட்டா கொடுமைகள் வளர்கிற காலம்
கடவுளின்மேலே இருக்கிற மக்கள் நம்பிக்கை தகர்கின்ற காலம்

எங்கணும் மக்களின் பிணங்களின் மேலே இறைவனின் ஆசியைக் கேட்போர்
எங்கணும் பிறனைக் கொலைசெய் அதுவே புண்ணியம் எனப்போ திப்போர்
கங்கணங் கட்டியே வெறிக்கதை பரப்பிடும் சுயநரிவெறியரின் பெற்றோர்
தாங்களும் கெட்டு சூழலும் கெட்டு நாடதும் அழியட்டும் என்போர்

மக்களில்பலவீ னத்தை நிறுத்தி அதிலே உயர்ந்திடும் தீயோர்
மக்களின் ஒற்றுமை தகர்த்ததில் தம்மை உயர்த்திட சதிவரை தீயோர்
மக்களின் தகுதியை சாதியிலிருத்தி ஒழுக்கத்தைச் சிதைத்திடும் தீயோர்
மக்கள்முன் உத்தமசீலராய் வலம்வர உதவவும் இருக்கிறார் தீயோர்

பள்ளங்களிருந்தால் பலகைகள் போட்டுக் கடந்திடல் அறிவதைச் சாரும்
கள்ளங்கள் கொண்டார் நமக்கிடை புகந்தால் அலட்சியம் ஆபத்தில் சேர்க்கும்
உள்ளங்கள் கள்ளத்தால் ஊறியோர் ஊராள இடம்விடின் சேதமே சேரும்
உள்ளங்கள் தூய்மையாய் தீமையை எதிர்த்திடின் மட்டுமே நாடுகள்மீளும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக