சனி, 13 ஜூலை, 2013

சும்மா சில வரிகள் 4







50. தீமைக்குத் திட்டமிடும் நேரத்தை நன்மையில் செலவிடும்போது
   புண்ணியங்களின் வாசல்கள் தாமாகவே திறந்து இடம்
   விடுகின்றன.

51. உரிய இடத்தில் இருத்தினால்தான் பொருளின்சரியான பெறுமதி தெரியும்.
   உரிய விதத்தில் எடுத்துரைத்தால்தான் உண்மைகளில் தாக்கம் உரிய விதத்தில் இருக்கும்.

52. வாய் சிலரிடம் மட்டும் பேசும். பத்திரிகை ஊரெல்லாம் பேசும்.
   உண்மைகளோ உலகமெல்லாம் பேசும்.

53. மனிதனின் வளர்ச்சி உடலிலல்ல, பொருளிலல்ல, உள்ளத்தின்
   தெளிவிலேயே அறிவதன் வெளிப்பாடாக வருவது உறுதியாகின்றது.

54. குடும்பத்துக்காக உழைப்பவன் சாதாரண மனிதன், மக்களுக்காக
   உழைப்பவன் நல்ல மனிதன், தன் தேசத்தைக் காப்பதற்காக   உழைப்பவனே மாமனிதன்.

55. முழுமை பெறுமுன் பிறக்கும் உயிர்களுக்கு ஆபத்துண்டு.
   முழுமையான தெளிவில்லாத திட்டங்களுக்கும் அப்படித்தான்.

56. வரிசையாய் அமைந்த அணிவகுப்புக்களின் அழகு தனித்துவமாகத்
   தெரியும். ஒழுங்கான, நேர்மையான மனிதர்களின் வாழ்க்கை
   முறைகளிலும் பாடம்  இருக்கும்.

57. உலகைச் சுற்றிவரப் பணமில்லையெனக் கவலை வேண்டாம்.
   நூலகங்களில் அதை இலகுவாகச் சுற்றி வரலாம்.

58. பாத்திரத்தில் துளையிருந்தால் நீர் சேர்த்துப் பயனில்லை.
   நோக்கமதில் தவறிருந்தால் படிப்பதிலே பயனில்லை.

59. ஒரு வண்ணம் கலப்படைந்தால் புதுப்புது வண்ணங்களுள் நுழைய
   முடியுமே தவிர, என்றைக்குமே தன் தனித்துவ நிறத்துக்குத்
   திரும்ப முடியாது. ஒழுக்க இழப்பும் அப்படித்தான்.

60. குதிரையின் சுதந்திரம் கடிவாளத்தைத் தவிர்க்குமேல் அதில்
   பயணிப்பவன் ஆபத்துக்குள்ளாவான். தேசத்தின் இறைமையுள்ள
   இனங்களைப் பிரித்தால் அந்நாடு ஆபத்துக்குள்ளாகும்.

61. கன்னியரின் எதிர்காலத்தை விபச்சாரிகளிடம் ஒப்படைப்பதும்
   தேசங்களின் எதிர்காலத்தைச் சுயநலவாதிகளிடம் ஒப்படைப்பதும்
   சுயசவக்குழிகளைத் தோண்டலுக்கு ஒப்பாகும்.