வியாழன், 23 ஜனவரி, 2020

புதியதல்ல.. புதுமையுமல்ல..




நீங்கள் …. பவரா?



நீங்கள் நீதியை நேசிப்பவரா?
அப்படியானால்...
பிறரை திருப்திப்படுத்துவதற்காக அநீதியை அங்கீகரிக்க மாட்டீர்கள்.

நீங்கள் நியாயத்தை மதிப்பவரா?

அப்படியானால்...

சந்தர்ப்பவாதிகளின் சலசலப்புகளினால் மனமுடைந்து போகமாட்டீர்கள்.
அவர்களால் உங்கள்மீது அநியாயமான பழிகள் சுமத்தப்பட்டாலும் பயப்படமாட்டீர்கள்.

நீங்கள் மனச்சாட்சியை மதிப்பவரா?

அப்படியானால்...

குற்றவாளிகளை மன்னித்து விடுவீர்கள். ஆனால் குற்றங்களை ஒருபோதும் அங்கீகரித்துவிட மாட்டீர்கள்.

நீங்கள் உண்மை நடபைத் தேடுபவரா?

அப்படியானால்...

உங்களைத் திருத்துவதை விரும்புவீர்கள்.
அவர்களின் பிழைகளைச் சுட்டிக் காட்டி அவர்கள் பிழை செய்து விடாமல் தடுக்க முயல்வீர்கள்
பணத்திற்காக- பதவிககாக – வசதிக்காக நட்பைக் கைவிட மாட்டீர்கள்

நீங்கள் புகழை விரும்புபவரா?

அப்படியானால்...

உங்கள் தகுதிக்கேற்ற புகழை மறுக்காதீர்கள். ஆனால் உங்களைச் சாராத – நீங்கள் பங்களிக்காத காரியங்களால் புகழ் வந்தால் அதற்குரியவரை அப்புகழ் சேர வழி செய்யுங்கள்                 

நீங்கள் நடுநிலை நிற்க விழைபவரா?

அப்படியானால்...

எதற்கும் தீர்ப்பெடுக்குமுன் அடிப்படையை ஆராயுங்கள். சம்பவங்களல்ல-
சம்பவங்களின் நோக்கங்களே பல பிரச்சினைகட்கும் அடிப்படை. காட்சியைக் காட்டி, சாட்சியம் சேர்ப்போர் பலரும் பொய்யை மெய்யாய்க் காட்டி, குற்றங்களைச் சரிபோல் மாற்றி, சமுதாயத்தில் தங்களைத் தப்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனித உருவங்களுள்ளுள்ள வஞ்சகத்தை விளங்காமல் நியாயத்தைக் காப்பாற்ற முடியாது.




புதியதல்ல..புதுமையுமல்ல..

    பொறுக்கிப் பார்த்தால்.......

கருத்துக்கள் சிந்தனைக் கிணற்றினின்று – சொந்த
விருப்பத்தை மீறியும் உண்மை சொல்லும்.

விருப்பில் லையென்ற காரணத்தால் - நல்ல
கருத்தினை மறுத்திடல் நல்லதல்ல.

தருணத்திற் கேற்பவே உருவைமாற்றும் - பொய்சொல்
திருடனே உண்மையை எதிர்த்து நிற்பான்.

பிறப்பதும் இறப்பதும் ஒருமுறைதான் - அதனைச்
சிறப்பாக்கும் நேர்மையும் ஒழுக்கமும்தான்.

விரும்பிடும் அனைத்தையும் அனுபவித்தார் – என்றும்
திருப்தியாய் வாழ்ந்தவர் என்றுமுண்டா?

ஆழுக்காறு இதயத்தில் ஒட்டிக்கொண்டால் - என்றும்
பழுக்காத இலவதாய் இதயம் மாறும்.

எழுத்தாளன் என்றுநீ ஆகவேண்டின் - உண்மை
எழுத்ததன் ஆளுமை உணர வேண்டும்.

பணம் என்ற ஒன்றையே பெரிது என்பார் – அந்தப்
பணத்தையே பசித்திடில் புசிப்பராமோ?

கணப்பொழுதே காணுமுன்றன் வாழ்க்கை ஓய!  - அந்தக்
கணப்பொழுதுள் ஒருநன்மைசெய்து பாரேன்!

துன்பத்தைக் கண்டுநீ துவண்டுவிட்டால் - என்றும்
இன்பத்தில் நிமிர்ந்துநீ நிற்க மாட்டாய்.

கண்ணியம் தெரியாத மக்களுக்கு – எந்தப்
புண்ணியம் சொல்லினும் புரிந்திடாது.

நல்லதை அள்ளிநாம் கொட்டினாலும் - என்றும்
நல்லவர்க் கில்லையேல் தீமை கிட்டும்

கறி ஆக்க உதவிற்றே என்பதற்காய் - நீயும்
எரிகின்ற பிழம்பினை விழுங்குவாயோ?

எல்லாரும் நல்லவர் என்று கொண்டால் - கொடிய
வல்லூறும் கிளியென்று கூறிக் கொள்ளும்

„கல்லிலே கடவுளைக் காணல் நன்று“  - அர்த்தம்
கல்லையே கடவுளாய்க் காணல் அன்று!







புதியதல்ல...புதுமையுமல்ல...

உங்களுடன் சில நொடிகள்...


பேச்சில் தெளிவும் கருத்தில் ஆழமும் உரையில் இனிமையுமாக இருவர்களுக்கிடையில் உரையாடல் நடைபெற்று அது முடிவுற்ற பின் அடிக்கடி அதுபற்றி நினைவு கொள்கையில்; மனம் நிறைதல் ஒரு பேறு என நினைத்தால் அதில் தவறில்லை என்பது எனது எளிய கருத்து.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து செருமனிக்கு வந்திருந்த பேராசிரியர் இர.ந.வீpரப்பன் ஐயா அவர்களை நான் சந்தித்துப்
பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் சில நாட்கள் எனதில்லத்தில் தங்கியிருந்தபோது எங்களுக்கிடையில் நடந்த கலந்துரையாடலகளால் அவரல்ல, நான்தான் அதிகம் பலனடைந்தேன் எனலாம்.

அந்த அறிவுச் சமுத்திரத்தின் பேச்சுக்களில் வழிந்த மனிதாபிமான உணர்வுகள், தமிழனத்தின் மேல் இருந்த ஆழந்த அக்கறையின் வெளிப்பாடுகள், உலக சுற்றுலாக்களால் அவரடைந்த அனுபவங்களின் பாடங்கள் இப்படிப் பலவிதங்களிலும் அவரை மிக மென்மையான ஆனால் வலுமிக்க தங்கக் கம்பியாக நானுணர்ந்து வியந்தேன்.

பேச்சுக்கிடையில் அவர் அடிக்கடி ஒன்றைச் சொன்னார். „எழிலன் நீங்கள் பேசுவதை எல்லாம் எழுத்தில் வடியுங்கள்“ என்றார் அவர். நான் ஏற்கனவே பல ஏடுகளில் எழுதிவருவதையும் பேச்சுக்களில் பங்கேற்பதையும் அவர் அறிந்திருந்தாலும் பேச்சுக்களின் போது நம்மை அறியாமலே நாமுதிர்க்கக் கூடிய நல்ல கருத்துக்களையும் எண்ணஙகளையும் நூல் வடிவில் பதிப்பதையே அவர் அப்படி அறிவுறுத்தினார்.

நான் சலனமின்றி தயங்குவதை உணர்ந்த அவர் என்னை வற்புறுத்தினார்.
அதன் வெளிப்பாடாக நானெழுதிய முதல் நூல்தான் இந்தப் புதியதல்ல...புதுமையுமல்ல..

இது வெளிவந்த ஆண்டு சென்னை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற
வங்கி நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் இதனை, இந்நூலைப் பதிப்பித்து எனக்காக வெளியிட்ட இளம்பிறை பதிப்பக உரிமையாளரும் முன்னாள் இளம்பிறை பத்திரிகையாசிரியருமான எழுத்தாளர் எனது பதிப்புமிகு இளம்பிறை ரகுமான் அவர்களே அனுப்பி பங்கெடுக்க வைத்திருந்தார்.

அங்கே இதற்கு இரண்டாம் பரிசுக்கான தெரிவு கிடைத்தது. நானும் நேரில் பங்கெடுத்தேன். இந்த நூல் பல நல்ல இதயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினதால் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் இதை அறிமுகஞ் செய்து வரவேற்றது தமிழ் கூரு நல்லுலகம் என அறிந்து ஆறுதலாக இருந்தது.

இப்போது என் கைவசம் ஒரேயொரு பிரதிதானிருக்கின்றது. ஆகவே உடல் மிகத் தளருமுன் எனது பதிவேடான „எழில்தமிழ்“ வளவில் இதைப் பதிந்திட விரும்புகிறேன்.
என்னை இணையத்தளத்தில் பலரும் அறிய உதவிசெய்த நான் நேருக்கு நேர் ஒரே முறைதான் சந்தித்தவரும் அமரராகி விட்டவருமாகிய எனது இதயம் கொண்ட அமரர் தம்பி இராஜன் முருகவேல் (சோழியான்) அவர்களுக்கும் இதனை இத்தடவை நான் அர்ப்பணிக்கிறேன். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட இயலாதபடிக்கு நான் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த வேளையில் அவர் மறைந்தமை எனது துரதிட்டம்தான்.

நாட்கணக்கில் மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த எங்களால் ஒருமுறையாவது நேரில் சந்திக்க இயலாதபடிக்கு இயங்கை தடுத்துவிட்ட கொடுமை தரும் மனவலி மிகவும் வேதனையைத் தருகின்றது.

ஆக்கங்களை மட்டுமே இத்துடன் இதில் பதிகிறேன்.

எழிலன்




       சமர்ப்பணம்


எனது இந்த நூலை......

சத்தியத்தை நேசித்தவர்க்கும் நேசிப்பவர்க்கும்
நீதியை மதித்தவர்க்கும் மதிப்பவர்க்கும்
உண்மைக்காய் உழைத்தவர்க்கும் உழைப்பவர்க்கும்
அன்பையே தெய்வமாய் ஏற்றவர்க்கும் ஏற்பவர்க்கும்
மற்றவர்க்காய் வாழ்ந்தவர்க்கும் வாழ்பவர்க்கும்
சுதந்திரத்தை விழைந்தவர்க்கும் விழைபவர்க்கும்
மனிதத்துவத்தை மதித்தவர்க்கும் மதிப்பவர்க்கும்
சிந்தித்துச் செயலாற்ற முனைந்தவர்க்கும் முனைபவர்க்கும்
நடுநிலை பிறழாது வாழ்ந்தவர்க்கும் வாழ்பவர்க்கும்
தமிழன்னைக்குண்மையாய்ப் பணிபுரிந்தார் புரிவார்க்கும்
வாழவைக்க வழிதேடும் உத்தமர்கள் அனைவர்க்கும்
எனதுள்ளத்துள் தமிழுணர்வை ஊட்டிட்ட
என் தாய்க்கும் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் அதே வேளையில்
அமரர் ஐயா இர.ந.வீரப்பனார் அவர்களையும்
என்னினிய நண்பர்  அமரர் இராஜன் முருகவேல் (சோழியான்)
இணைத்துக் கொள்கிறேன்.

எழிலன்


புதன், 8 ஜனவரி, 2020

இயற்கை எச்சரிக்கும்

தடங்களில் திரும்பினால்...5



„ஆவ் ஆவ் அம்மா இன்று பளபளவென்று மின்னுகிறார்கள்“

புது வருடப் பிறப்புக்கான நடுநிசி வழிபாட்டிற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த எங்கள் குடும்பத்தில் நிலவிய கலகலப்பிற்கு மத்தியில் அம்மா அன்று உடுத்தியிருந்த நாவல் நிறப் பட்டுச் சேலையும் அதனில்  படர்ந்திருந்த வெள்ளி அலங்காரப் பதிப்பின் அமைப்பும் சில அணிகலன்களேயாகினும் அவற்றின் மனதைக் கவர்ந்த மெருகும் அதற்கு மேலும் அழகூட்டிய அம்மாவின் புன்னகை தவழ்ந்த முகத்தின் குளுமையும் அப்பப்பா!  நான் அம்மாவின் அழகில்  மயங்கியே போயிருந்தேன்.

எல்லாருமே புத்தாடையில் இருந்தாலும் அம்மா அன்று தனித்துவமாக அழகுடன் இருந்ததாக எனக்குப் பட்டது. அது ஏன்? தெரியவில்லை.

நடுநிசிக்குச் சற்று முன்னதாகவே துவங்கிவிட்ட திருப்பலி ஆராதனையின் நடுவே சரியாகப் பன்னிரண்டு மணிக்குப் புதிய ஆண்டு பிறந்துவிட்டதைத் திருத்தந்தையான குருவானவர் nதிவித்தபோது ஆலயத்துள் பெரும்பான்மையோர் மிகுந்த பக்தியுடன் புத்தாண்டில் தத்தமது குடும்ப மற்றும் உறவுகள் பற்றியும் அவர்களின் நலன் பற்றியும் இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவதும் அதே சமயம் வெளியே செவி அதிர வெடிகளும் வாண வேடிக்கைகளுமாக நகர் இருளகற்றி ஒளி படர்ந்து வண்ணங்களும் புகையும் மருந்து மணமுமாக கலகலப்பதை கோவில் சன்னல்கள் வழியாக ஒரு பகுதி இரசித்துக் கொண்டும் இருக்க பலி பூசை தொடர்ந்தது.

பூசை முடிய மக்கள் வெளியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துவதும் கைகுலுக்குவதும் „ஸ்தோத்திரம்“ என்று பெரியவர்களிடம் ஆசி பெறுவதும்  நடந்தபின் குடும்பங்கள் வீடு திரும்பின.

எங்கள் குடும்பம் வீட்டுக்கு வந்ததும் வழமைபோல எல்லாரும் மீண்டும் ஒரு முறை சிறிய குடும்ப செப ஆராதனையில் ஈடுபட்டு விட்டு ஒரு சிறிய உணவருந்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில் உடை மாற்றச் சென்ற அம்மா ஓர் அதிர்ச்சியுடன் கண்கலங்க வந்து நின்றார்கள்.

எல்லார் முகங்களிலும் அதிhச்சி
„என்னம்மா! என்னது?“

„எனது கால் கொலுசுகளில் ஒன்றைக் காணவில்லை. கோவிலில் கழன்று விழுந்து விட்டது போல் தெரிகிறது“

அம்மாவின் கண்களிலிருந்த ஆழமான கவலை என்னை என்னவோ செய்ய
தம்பியை அழைத்துக் கொண்டு நான் கோவிலுக்கு ஓடினேன்.

கொஞ்சப் பேர் இன்னும் இருந்தபடியால் கோவில் திறந்திருந்தது. எங்கள் குடும்பம் இருந்த இடம் மற்றும் திரும்பிய வழி போதாதென்று முழுக் கோவிலையுமே சுற்றிச்சுழன்று தேடியும் கிடைக்கவில்லை. எனவே வருகிற வழியெல்லாம் தேடித்தேடி அலைந்தோம்.

ஓரு மணி நேரமளவு தேடுதலின் பின் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம்.
அம்மாவின் கவலையைப் போக்க எனக்குத் தெரிந்த ஒரு கருத்தைச் சொன்னேன்.

„வெள்ளிக் கொலுசுதானே! பழசைக் கொடுத்துவிட்டு புதிதாக ஒரு சோடி வாங்கி விட்டால் போச்சு. நாளைக்கு அல்லது நாளை மறுநாள் வாங்கி விடலாம். கவலையை விடுங்கள்“

அப்பாவும் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி அமைதியாக இருக்கவும் கவலைப்பட எதுவுமில்லை என்றும் அனைவரும் தூங்கலாமென்றும் காலையில் நேரத்துக்கு எழும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ள அனைவரும் துயிலப் போனோம். ஆனால் ஏனோ இலகுவாக அந்த வருட முதல் நாளில் எங்களுக்குத் உறக்கம் வருவதில் பெரும் சிரமமிருந்தது.

எல்லார் மனங்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. நானும் தம்பியும் கொலுசைத் தேடிச் சென்ற வேளை வீட்டில் பலவிதமாகக் கருத்துப் பரிமாற்றம் நடந்திருந்தது போலவும் தெரிந்தது. ஏனோ எல்லார் மனங்களும் மிகவும் புண்பட்டு இருந்தன.

               ….........................................

பொழுது மலர்ந்ததும் பக்கத்துவீட்டு உறவினர்கள் அயலவர்கள் எனப் பலரும் வந்து வந்து வாழ்த்தவும் நாங்களும் கலக்கவும் வீட்டிலிருந்து பிற மத அயலவர்களுக்குப் பலகாரம் சாப்பாடு நாங்கள் எடுத்துப்போக அவர்களில்ல வகைகள் இங்கு வர இப்படி அன்புச் சம்பிரதாயங்களில் மூழ்கி ஊறிய எல்லாரும் முந்திய இரவு அதிhச்சியை கிட்டத்தட்ட மறந்தே போனோம்.

மத்தியானம் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு வெடி கொளுத்துவது நடந்தது. சில வீடுகளில் வெடி இருக்கும் பற்ற வைக்க ஆளிருக்காது. அந்தப் பெரியவர்கள் சார்பாக உதவும் பாவனையில் இளவட்டங்கள் நாங்கள் அவற்றைக் கொளுத்தி அவர்களையும் எங்களையும் திருப்திப்படுத்திக் கொண்டோம். நானும் எனது பங்கைச் செய்த பின் வீட்டுக்குள் நுழைய எல்லாரும் சாப்பிட ஆயத்தமாகி இருந்தார்கள்.

அப்போதுதான்  அம்மாவின் முகத்தில் இன்னும் களை குறைந்திருந்ததைக் கவனித்தேன். புன்முறுவல் இருந்தது ஆனால் புண்பட்ட முறவலாக இருந்தது.

சரிதான்! அம்மாவுக்கு இன்னும் கொலுசின் கவலை அப்படியே இருக்கிறது போலும். சிறிது கழித்து அம்மாவிடம் பேசுவோம்.

நான் முடிவெடுத்துவிட்டு மூன்று மூன்றரை மணியளவில் வெளி சன்னல் இருந்த அறையில் அம்மா தனியாகப் பாதையைப் பார்த்தபடி இருப்பதைக் கண்டுவிட்டு நெருங்கினேன்.

தற்செயலாகக் கவனித்தேன். அம்மாவின் காலிலிருந்த தனிக் கொலுசைக் காணவில்லை.

„அம்மா கொலுசைக் கழற்றி விட்டீர்களா?“
அம்மாவின் கண்கள் வீட்டில் இருந்த சிறிய சுரூப கூடு எனப்படும் சுவரில் தொங்கிய இயேசுவின் சொரூபம் இருக்கும் இடத்தைக் காட்டியதும் நான்
திரும்பிப் பார்த்தேன். அச்சுரூபத்தின் பாதத்தில் கொலுசு மடங்கிக் கிடந்தது. அம்மாவின் கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வழியவும் நான் பதறி விட்டேன்.

„அம்மா இந்த சின்ன விடயத்துக்கு இப்படிப் பதற வேண்டியதில்லையே! நாளைக்கே புதிது வாங்கினால் எல்லாம் சரியாகிவிடுமே!“

„இல்லைய்யா! எனக்கென்னவோ ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிடும் போல மிகவும் பயமாக இருக்கிறது“

எனக்குக் கோபமே வந்துவிட்டது.
„என்னம்மா இந்த நாகரீகமான காலத்திலும் இப்படி மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கொண்டு..... யாரும் கேட்டால் சிரித்துவிடப் போகிறார்கள்“

அம்மா தனது விழிவழிந்த நீரைத் துடைத்துக் கொண்டவர்  மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் என்னிடம் பேசினார்கள்.

„மகன் இயற்கை எதையுமே சொல்லாமல் செய்வதில்லை. அதனை உணர்ந்த நம் முன்னோர்கள் பலதையும் பல விதங்களில் பாமர மக்களுக்ப் புரியும் விதமாகச் சொன்னைதை அரைகுறையாகப் புரிந்து கொள்வது சரியல்ல.
அம்மா எதைச் சொல்கிறார்கள்?
நான் முழிப்பது அவர்களுக்குப் புரிந்தது தெரிந்தது.

„இன்றைய நமது அறிவாளிகளெல்லாருமே தாம் மற்றவர்களிடமிருந்து கற்றவற்றை மாற்றிச் சொல்லிப் புகழ் தேடுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நமது மூதாதையர்கள் தாம் கண்டு அனுபவித்துப் பெற்ற பட்டறிவு உண்மைகளைத்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள். உனக்கு நான் சொல்வது புரியக் கடினமாயிருக்கிறதல்லவா? கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!“

பாய்ந்தோடிச் சென்று தண்ணீர்ச் சொம்புடன் திரும்பினேன். மடக்மடக்கென்று அருந்தியவர்கள் சற்று நிதானமாக மாறியது தெரிந்ததும் பெரிய ஆறுதல் எனக்கு.

அம்மாவிடமும் எனது சீயானிடமும் (தாத்தா) கற்றவற்றை எனது நண்பர்களிடத்தில் அவிழ்த்துவிட்டு பெரிய அறிவாளியாக நாடகமாடிய எனது சின்ன வயது கலையைத்தான் அம்மா சொல்வது போல எனக்குள்ளேயே ஒரு வெட்க உணர்வு. பொறுமையைத் தவிர வேறு வழி?

„கவனமாகக் கேள் மகன்;. மனிதரைத் தவிர மற்ற உயிர்கள் அனைத்துமே இயற்கையை எப்போதும் மதித்து நடப்பதால் அவற்றுக்கு இயற்கையின் எச்சரிக்கைகள் இலகுவாகப் புரிந்துவிடும் சக்தி இருப்பதும் மனிதர்கள் அதை மீறி நடப்பதும்; அதன் எச்சரிக்கையை அலட்சியம் செய்வதும்தான் நம்மிடம் எதையும் புரிந்து கொள்ளாமல் தவறாகக் கணித்துவிடும் பலவீனத்தையும் வளர்த்திருக்கிறது.“

„ அப்போ பகுத்தறிவுக் கருத்துக்கள் பொய்யா?“
„புரியாமைகள் பகுத்தறிவு அல்ல“
நான் தடுமாறுவது அம்மாவுக்குப் புரிந்தது தெரிந்தது.

„கவனமாகக் கேள்! நாம் வளர்க்கும் ஆடு மாடு கோழி பூனை நாய் மட்டுமல்ல காட்டிலேயே வசிக்கும் விலங்குகள்கூட இயற்கை அனர்த்தம் வரப்போகுதென்றால் முன்கூட்டியே அதை உணர்நது அலறியடித்துக் கொண்டு தப்பியோட முனைவதும் அதைக் கண்டுதான் மனிதர்களில் அறிந்தவர்கள் பாதுகாப்பைத் தேடுவதும்தான் எங்கும் நடக்கிற உண்மை தெரியுமா?“ அது எனக்குப் புதிய செய்தி.

பெரும் புயலோ பூகம்பமோ இயற்கை அனர்த்தமோ வரப்போகுதென்றால்
நமது வீட்டு விலங்குகளும் கூட அதை உணர்ந்து கொள்ளும் தெரியுமா?“

„அப்படியா?“ புதிய பாடமொன்று கற்ற மாதிரி ஒரு நிறைவு எனக்கு.

„அதற்கும் கொலுசுக்கும் என்ன சம்பந்தம்? அதை நம்புவது மூடத்தனம்தானே!“

முதல் தடவையாக அம்மா வாய்விட்டுச் சிரித்தார். அப்பாடா என்றிருந்தது எனக்கு.

அப்படி இருக்கவேண்டும் என்பதுதான் எனக்கும் உள்ளுக்குள் இருக்கும் உணர்வு. ஆனால் கொலுசு வெள்ளியல்லவா அதுவும் அது ஓர் இயற்கைப் பொருளல்லவா? அதனால்தான் உள் மனம் அச்சப்படுகின்றது“

„வெள்ளிக்கு உயிரில்லையே!“

„சரிதான் ஆனால் அதுதானே அழகையும் மதிப்பையும் மரியாதையையும் தருகின்றது? அப்படியென்றால் அதனுள் ஏதோ சக்தி உண்டென்று நம்பலாமா கூடாதா?“

அம்மா தொடர்ந்தார்.“ இயற்கையால் வந்த எதுவுமே உருமாறுமே தவிர அழிவதில்லை. நாமும்தான். இதை நீ வளர வளர புரிந்து கொள்வாய். இப்போதைக்கு இது குருவி தலையில் பனம் பழத்தை வைக்கிற கதை. ஆகவே விட்டுவிடுவோம்.“

அட்சர கணித ஆசிரியரிடம் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மாணவனைப்போல நான் நின்றேன். அம்மா கடைசியாக ஒரு சின்ன விளக்கம் தந்தார்கள்.

„இந்த நல்ல சகுனம் அபசகுனம் என்பதில் பல nhபாய்களுமிருக்கலாம் சில உண்மைகளும் இருக்கலாம். நீ என்ன நினைக்கிறாய்?“

„இது நியாயமான சிந்தனை என்று நினைக்கிறேன்.“

„அப்படியென்றால் நீ ஆண்டவரிடம் ஆபத்தேதும் நம் வீட்டுக்கு வந்துவிடாமல் கேட்டு மன்றாடு மறக்காதே! அவரது சித்தத்தின்படி நடப்பது நடக்கட்டும்.“

இது நடந்த ஆண்டு ஒரு லீப் வருடம் மாசி மாதம் 29 வரை நீளும் வருடம். சரியாக ஆறு நாடகள் கடக்கையில் அம்மா திடீரென்று கடும் வயிற்றுவலிக்காளானார்கள். பல சிகிச்சைகளும் பயனின்றி பதினைந்தாம் நாள் ஓர் அறுவை சிகிச்சையுடன் உலகை விட்டு மறைந்தார்கள்.

அம்மா முன்னுணர்ந்த உணர்வு இயற்கையா மூட நம்பிக்கையா தற்செயலா எதையுமே என்னால் உணரவோ விளக்கவோ முடியாத நிலையில் கார்மேகத்தில் தாகந்தீர்க்க நீர் தேடிப்  புகுந்தலைந்த ஒரு பறவைபோல அர்த்தமில்லா முயற்சிகளுடன் அன்றிலிருந்து இன்றுவரையும் கூட அவர்களின் நினைவில் உங்களில் பலரையும் போல் நானும் வாடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தக் கால கட்டத்தில் ஒரு நாள் என் அலுவலகத்துக்குள் வந்த எனது அதிபரின் தம்பி என் முன் வந்து அமர்ந்தார். நல்ல நகைச்சுவை ததும்பும் மனிதராவர்.

„ஆமாடே! நீ கவிதை எல்லாம் எழுதுவியாமே!“
„அங்க்கிள் நக்கலடிக்காதீங்க!“
„இல்லேப்பா நானொரு மெட்டு சொன்னா டக்குன்னு ஒரு பாட்டு எழுதித் தருவியா?“
„டக்குடக்குடக்குன்னு எழுதினா போதுமா?“
இது போட்டி. முடியுமா முடியாதா?“
„உங்களுக்கு சரியா பாட முடீயுமா முடியாதான்னு முதலில் பார்ப்போம்“

அருமையான குரலில் ஒரு மிகப்பழைய இந்திப்பாடலை முணுத்தார்.(அது அப்போதே மிகப் பிரபலமாகியிருந்தது)~

„ஹாயேகா..ஹர்யேகா..“ என்று வரும்                                          மிகப் பழைய லதா மங்கேஷ்கர் பாடிய பாடலது.

இருவருக்கும் இந்தி தெரியாது.ஆனால் இராகத்தை அவர் முணுமுணுக்க் நான் மடமடவென்று எழுதி முடித்தேன். அவர் மெட்டை நிறுத்த நான் பாடலை எழுதி முடித்து நீட்டினன்.

அவர் மகிழ்ச்சியில் அதிர்ந்து போனார். ஆனால் எனது சிரமமின்னைக்கு அதிமுக்கிய காரணம் அது என் அம்மாவை மனதில் வைத்து நான் எழுதியதால்தான்.

இதை வாசித்தால் நிச்சயம் அழுவார். ஏனெனில் அதனை அவரே அதே மெட்டில் தமக்குள் முயன்று பாடியபின் அழுதுவிட்டார்.

„என் ஆத்தாவை (தாயாரை) நினைக்க வைத்து விட்டாயடா நீ“ எனறு அமைதியாகக் கண்ணீர் விட்டார் அந்த நல்ல மனிதர்..

அதன்பிறகு அந்தப்பாடல் என் இதயத்திலும் பதிந்து விட்டது.
கூகுளில் தேடினால் இந்தப் பாடல் உடனே வரும். தாயை இழந்த எந்தச் சகோதரமும் வயது வித்தியாசமின்றிப் பாடிப் பாருங்கள்.

அது நம் குரலாகவே ஒலிக்கும் என நம்புகிறேன்.

அந்தப் பாடல் வரிகள் இவைதாம்.

அன்னையே.. அன்னையே...உன்னையே
அம்மா என்றே அழைத்தேன்  இல்லையே இல்லையே இல்லையே

என்ஊன் உயிர்நீ என்றே – உன்
உறவில் உல..கில் வந்..தேன்
தாய்நீ இல்லாமல் இருந்..தால்
வாழ்வே இல்லாது இருந்திருப்பேன்
அன்பே என்னாசை அம்மா..
வருமா அந்நாட்கள் மீண்டும்
மரணம் வந்தாலும் நெஞ்சம்
மறக்காது தன்னில் வைக்கும்.. (அன்னையே...அன்னையே...)

சில வரிகள் - சில சொற்கள் -  சில கருத்துக்கள் _ சில சமயங்கள் வாழ்வின் நிழலாகித் தொடர்வதே இயற்கையின் இனிய விதி என நம்பலாமா?

எச்சரிக்கை எதுவென்று அடையாளம் காணுதற்கு
எச்சரிக்கும் முன்நடக்கும் உவர்க்கின்ற சம்பவங்கள்
எச்சறுக்கும் மண்வழியில் வருவதற்கு முன்னுணரும்
எச்சரிக்கை இயற்கையுடன் இணைவருக்கே நின்றுதவும்

பட்டறிவில் பதம்நிறைத்துப் பக்குவமாய்ச் சொன்னவர்கள்
தொட்டவற்றில் பதிந்துணரும் தெளிவுதனைப் பெற்றவர்கள்
பட்டதெதோ கண்ணருகில் அதைமட்டும் உண்மையெனப்
பட்டுணரா அறிவுஉளார் பகுத்தறிவாய்ப் பரப்புவர்கள்

கண்ணுக்கே தெரியாமல் நமைச்சுற்றிப் பலகோடி
கண்முன்னே இயங்கிடினும் இலையென்பர் பலகோடி
மண்ணிற்கு மேல்நின்றும் மண்ணின்உள் முழுதறியார்
விண்ணினையும் வளைத்திடலாம் எனநினைப்பின் அவர்பேடி

படைத்தவனின் சித்திரங்கள் வகைவகையாய் இயற்கையதாய்
படைப்;புகளின் செயல்வழியில் எதிரெதிராய்ப் பலன்தருதாய்
இடைவிடாது இயங்குவதை இயன்றவரை தெளிந்துணர்ந்தால்
நடைபெறுமெச் சம்பவமும் விதமமைந்த தெனஉணர்வாய்!



ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தடங்களில் திரும்பினால்....04.



சத்திய அனுபவம்


ஓரு பொருளை உருவாக்குகையில் எப்படிப்பட்ட கவனம் அவசியமோ அதையொப்ப கவனமும் கரிசனையும் குழந்தைகளை வளர்ப்பதிலும் பெற்றவர்க்கு உண்மையாக இருக்க வேண்டும்.

எனது தாயார் எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் வேளைகளில் அடிக்கடி அறத்தை அதாவது ஈகையைப் பற்றி குறிப்பிடுவது வழக்கம். எங்கள் சூழலில் ஏகப்பட்ட ஏழைகளே இருந்த காரணத்தினாலோ என்னவோ இரக்கத்தின் அவசியமும் ஈகையுணர்வின் முக்கியமும் அங்கிருந்த நல்ல பெரியவர்களிடம் நன்கு உணரப்பட்டு இருந்தமையை நானும் கவனித்ததுண்டு.

ஓரு நாள் எங்களிடம் „பகிர்ந்து உண்டால் பசியாறும்“  என எதற்காகவோ எங்கள் அம்மா சொல்ல நான் சிரித்தேன்.

„அம்மா! ஓரு இறாத்தல் பாணை (வெதுப்பி என்பது நல்ல தமிழ்ச் சொல் அப்போது தெரியாது) (டீசநயன) எட்டு பேருக்குப் பகிர்ந்தால் அத்தனை பேரும் பட்டினிதானே என்று ஆடினேன் நான். ஏனென்றால் அக்காவுக்கும் எனக்கும் பாணை வெட்டுகையில் நீளத்தை வைத்து சிறுசிறு சண்டைகள் அடிக்கடி வருவதுண்டு.

அம்மா சிரிக்காமல் அமைதியாக விளக்கினார்.“வயிறு நிரம்புவதல்ல திருப்தி. மனம் நிறைவதுதான் திருப்தி. அப்பாவைப் பாருங்கள் காலை ஏழு மணிக்கே புறப்பட்டுப் போகிறவர் மாலை இருட்டாகும்போதுதான் வருகிறார். ஏனென்று கேட்டால் ஓவர் டைம் வேலை பார்த்தேன் எனகிறார்.
பகலில் கூட சாப்பிட வராமல் அங்கேயே எதையோ தின்று சமாளிக்கிறார்.

ஆனால் மாதம் முடிய முழுச் சம்பளத்தையும் அப்படியே கொண்டு வந்து தந்து விடுகிறாரே! ஆது மட்டும் இல்லையென்றால் நாமென்ன செய்ய முடியும்? எப்படி வாழ முடியும்? நமக்காக இப்படிக் கடினப்படும் அப்பாவுக்கு இதனால் என்ன இலாபம்? அத்தனை துயரத்தையும் தாங்கினாலும் நாமெல்லாரும் மகிழ்ச்சியாக வாழுவதில் கிடைக்கும் மனதிருப்தியைத் தவிர அவருக்கு என்னதான் கிடைக்கிறது?“

அம்மாவின் கண்கள் கலங்குவது தெரிந்தது. சம்மட்டியால் அடிமேல் அடிபட்ட அதிர்ச்சி எனக்கு.

சீரிய கருத்துக்களின் ஆழம் தலைக்குள் இறங்கும்போது தானே அறிவில் தெளிவு வருகிறது!

அம்மா இன்னும் தெளிவு படுத்தினார்.

„நம்மிடமிருப்பதில மிச்சத்தை மற்றவர்க்குக் கொடுப்பதல்ல தர்மம்.
நல்லதைக் கொடுத்து பெறுபவரின் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தால் அதுவே தர்மம்-ஈகை. நாம் செய்யும் அத்தகைய நன்மைக்கான பலனை ஆண்டவன் நிச்சயம் நமக்குப் பலமடங்காகத் தருவான் என்பதை நீங்கள் எப்போதும் மறக்கவே கூடாது.

அம்மாவிடம் நான் கண்ட சிறப்பு என்னதென்றால்  கேள்வி கேட்க அனுமதிப்பதும் புரியும் வரை அமைதியாக விளக்கும் பண்பும்தான்.

பிழை செய்து அடிவாங்கிய வேளைகளில் சிறிது கழித்து ஏன் அடிவாங்க நேர்ந்தது என்பதை என்னிடமே விளக்கக் கேட்பார். கடினமாக இருக்கும் ஆனால் தவறை உணரவும் நியாயத்துக்குக் கட்டுப்படவும் வேண்டிய
மனப்பக்குவம் கிடைக்கும். அப்போது சிறிதான ஆனால் பெரியகொடை 
இது எனக்கு.

சில மாதங்கள் கழிந்திருக்கும். ஓருநாள்... பகலுணவு நேரம். வழக்கமாக எல்லாரின் தட்டுக்களிலும் உணவு பரிமாறப்பட்டு எங்களிலொருவர் இருவர் குசினியிலிருக்கும் அம்மாவிடமிருந்து வாங்கி வர பிறகு ஒன்றாயமர்ந்தே
வட்டமாக உணவருந்துவோம்.

அன்று எங்களையெல்லாம் சாப்பிடச் சொல்லியவர் தாம் சற்று தாமதமாகவே வருவதாகவும் தமக்காகக் காத்திராமல் சாப்பிட்டுவிடவும் பணித்தார்.

எதிர்த்துப் பேசும் வழக்கம் இல்லாதபடியால் அம்மா வர மிகத் தாமதித்ததும் எனது அக்கா மெதுவாகக் குசினிக்குள் எட்டிப் பார்க்கத்து விடச் சொன்னாள். நானும் கதவிடுக்கினால் அவதானித்தபோது அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.

அங்கே.. அம்மா ஒர் ஏழைத் தாத்தாவுக்குத் தமது தட்டிலிருந்த உணவை ஒரு தட்டில் வைத்து வழங்கிக் கொண்டிருக்க அவர் அருந்த...

எனக்குத் தலையைச் சுற்றியது. உடனே பின் நகர்ந்து எனது சகோதரிகள் மூவரிடமும் ஒரே தம்பியிடமும் கண்ட காட்சியைக் குசுகுசுத்தேன்.

உள்மேசையில் அப்பாவுக்கான உணவை ஒரு தட்டில் வைத்து இன்னொரு தட்டினால் மூடியிருந்தார்கள் அம்மா. அக்கா சொன்னபடி நான் அந்த மூடியிருந்த தட்டை எடுத்து வர ஆளாளுக்கு ஓரிரு பிடிகளாக புதுத்தட்டில்
உணவைச் சேர்த்து ஒரு தட்டுணவை தயார் செய்து விட்டுக் காத்திருந்தோம். பெரியவர் விடைபெறும் சப்தம் கேட்டது. நாங்கள் உண்ணாமல் காத்திருக்க அம்மா உள்நுழைந்தவர்கள் நாங்கள் உண்ணாமல் காத்திருப்பதைக் கண்டு சற்று அதிர்வது தெரிந்தது.

நாங்கள் நடந்ததை விளக்கினோம். அம்மா உடனே கண்கலங்கிவிட்டது. புpறகு சொன்னார்கள்:

„பார்த்த்தீர்களா குழந்தைகளே! நாம் செய்யும் தருமம் நமக்கு இருமடங்கான பலனை இறைவனிடமிருந்து பெற்றுத் தரும் என்று அடிக்கடி சொல்வேனே! அதை கடவுள் இப்படி என் பிள்ளைகளைக் கொண்டே இன்றைக்குச் செய்து காட்டிவிட்டாரே!“

எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்லி செபித்தோம்.
பிறகு?
பிறகென்ன அன்று எவருமே சாப்பிடவில்லை அத்தனை பேருக்கும் அம்மாதான் ஊட்டி விட்டார்கள்.

தட்டில் சோறாக இருந்த உணவு அம்மா கையினால் அமுதமாக சுவை தந்;த அந்த அனுபவத்தை இன்றும் கூட உணர முடிகிறதே!


நல்லதைச் செய்யுமெண்ணம் நமக்குள் வளர விட்டால்
நல்லதை மட்டுமெண்ணும் பக்குவம் வளர விட்டால்
நல்லரோ கெட்டரோ நம் நன்மையில் பயனடைந்தால்
நல்லதைச் செய் காரணம்தான் புண்ணியம் ஆகவரும்

நல்விதை விதைப்பவர்க்கே நல்லுணவு பின்புசேரும்
நல்லதைச் செய்பவர்க்கே நிம்மதி தொடர்ந்துசேரும்
நல்லதைச் செய்பவர்க்கும் தீமைகள் செய்வர்கூட
நல்லதை உணர்ந்து உள்ளால் உருகலும் நடத்தல்கூடும்









இவன் தமிழனல்லன்...கொச்சியன்




1958ம் ஆண்டில் இலங்கைத் தீவில் தமிழர்க்கெதிரான சிங்கள வெறியாட்டம் தலைதூக்கிய காலகட்டம். இனப்பகைமையை வளர்க்கும் தீய பிரச்சாரங்களும் தீப்பிழம்புகளும் இணைந்து கொழும்பில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தன. அதற்கிடையில்...

கொழும்பு மாநகரின்; ஒரு பகுதிpயில் சிங்கள தமிழ் ஈரின மக்களும் இசுலாமியர்களும் மிகமிக அன்பாகவும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடன் நெருங்கி வாழ்ந்து வந்த அதிசயமும் நடக்கத்தான் செய்தது.

தமிழர் நிறைந்த  அந்தப் பகுதிக்குள் கலவர செய்திகள் பரவினவே தவிர தவறான எதுவுமே இடம் பெறாதிருந்தமை பலருக்கும் பெரிய ஆறதலாக இருந்த நேரமது.

இனவெறுப்புக்கு இடம் கொடுக்கா உயர்ந்த தரம் அங்குவாழ்ந்த மிகமிகச்
சாதாரண ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடமிருந்தமை சிறப்பு.

ஆனால் படித்த பட்டம் பெற்ற மற்றும் பணபலத்தால் மட்டுமே உயர்ந்திருந்த அரசியல்வாதிகளின் சுயநலங்களோ இனத்துவேச பற்றைக்குள் தீவைத்து சுகந்தேடிக் கொண்டிருந்தன.

கலவரம் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிலிருந்து அமலனின் தந்தையாரின் தொழிலகமும் வேலைநிறுத்தத்தில் இதர பல நிறுனங்களுடன் சேர்ந்து கலந்து கொண்டிருந்ததால் பல குடும்பங்களின் பொருளாதார நிலை நலிவடையத் தொடங்கியிருந்த நேரமது.

இந்த நிலையில்தான் ஒருநாள்...

„பூூவம்மா! பூூவம்மா! நீங்க இருக்குதா?“

எதிர்த்த தோட்டத்தில் வசிக்கும் ரிச்சர்ட் ஐயாதான் அழைக்கிறார் எனத் தெரிந்த அமலனின் தாயார் அவனிடம் கதவைத் திறந்துவிடப் பணித்தார்.

உள்ளே வந்த ரிச்சர்ட் ஐயா மடமடவென்று தமக்கே தெரிந்த தனித்தமிழில் செய்தியை உதிர்த்து விட்டார்.

„பூவம்மா நம்மோடே பொம்பளை புள்ளைய வெளிக்கு வீசிப்போட்டது. ஆம்பள புள்ளே“

அமலனின் அம்மா பதறிவிட்டார். படுபாவி மனுஷா! குழந்தையை அவள் வீசினாள் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாரே!

„எப்போ நடந்தது இது?“

„நேத்து சாமங் டைம் ஆஸ்பத்திரியிலேதாங் போட்டது!“

அம்மாவின் தலை ஒரு விநாடி கிரகம்போல சுற்றி நின்றது. புpறகு நிதானம்.

இவர் தனது மனைவிக்குக் குழந்தை பிறந்ததைத்தான் சொல்கிறார் என்று உணர்ந்தவர் விழுந்து விழுந்து சிரித்தார்.

அவரும் தனது பல்வரிசையைக் காட்டிக் கொண்டார். அவர்களின் குடும்ப நண்பரான சிங்களவர் அவர். தமது தாய் மொழியை விடவும் தமிழிலும் செய்தி பேச முயன்றமை அமலனையும் நன்கு இரசிக்க வைத்தது.

„ரிச்சர்ட் ஐயா உங்களுக்குப் பிள்ளை பிறந்திருக்குன்னு சொல்லுங்க“

„நாங் இல்லே நம்மட பொண்டாட்டிதாங் போட்டது“

இவருக்கு தமிழ் இலக்கண விளக்கம் கொடுத்து மூளையைக் கலக்கிக் கொள்ள அஞ்சியவறாக அமலனின் தாயார் அவரை அமரச் சொல்லி தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார்.

சிங்;களத்தில் ஐயா என்றால் அண்ணன் எனறர்த்தம். ரிச்சர்ட் ஐயா அமலனின் தந்தையுடன் வேலை செய்பவர்.

„தோமாஸ் எல்லாரோட இஸட்ரைக் எடம் போனதா?“

„ இங்கே வழமைபோல எல்லாரும் வந்தாங்க. உங்களை எங்கே என்று தேடினாங்க.பிறகு அவங்கள்ளாம் சேந்தே போனாங்க“

„நாங் விடிங்க விடிங்க அங்கே வார்ட்டிலேதாங் நின்னது. இன்னும் தூங்க கூட இல்லே. நாங் பிந்தி வந்து தோமாசுக்கு சொல்லறது“

„மொதல்ல குடும்பம் பிறகுதான் மத்ததெல்லாம்“ அம்மா சொல்ல ரிச்சர்ட் ஐயா முறுவலித்துக் கொண்டார்.

அமலன் தேநீரை அவர் கைகளில் நீட்டியபோது ரிச்சர்ட் ஐயா கேட்டார்:

„நாங் ஒன்னு கேக்கிறது. இந்த பொடியங் பொறந்தா என்ன குடுக்குறது?

ஓகோ! ஐயா நம்ம சம்பிரதாயத்தை; கேக்கிறார்....

அம்மா சொன்னார். „கல்கண்டுதான் கொடுப்பாங்க“

அமலனை அருகே அழைத்தவர் சொன்னார்; „மவன் இந்தா இந்த ரெண்டு ரூவாவுக்கு கலுகுண்டு வாங்கிட்டு வாறது. ஓடு!“

„கலுகுண்டு இல்ல கல்கண்டு“

„ஏதுசரி வாங:கிட்டு வாடா படுவா“ அன்பு தொனிக்க அவர் கத்த அமலன் கடைக்கு ஓடினான்.

அமலன் திரும்பி வந்ததும் கற்கண்டுப் பொட்டலத்தைத் திறந்து அள்ளி அமலனின் தாயாரிடம் கொடுத்து விட்டு மீதியைத் தம் வீட்டருகில் இருப்பவர்களுக்குப் பகிர்வதாகச் சொன்னவர் நன்றி சொல்லிப் புறப்பட்டார்.

             …...............................................................


அமலனின் அந்தச் சிறிய வீட்டின் வரவேற்பறையில் நீளமாகப் பாய்கள் விரிக்கப்பட்டு அவற்றில் அருகருகாக சுமார் எட்டுப் அல்லது ஒன்பது பேர் வரிசையாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர்.

எல்லார் முகங்களிலும் கவலையும் ஏக்கமும் ஒருவித தடுமாற்றமும் பூசப்பட்டு இருந்தாலும் ஏதோ கலகலப்பாகப் பேசி ஆக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்குள் இருந்தது தெரிந்தது.

அவர்களில் ஒரேயொரு தமிழர் வீரய்யா. இந்திய வம்சாவழி வந்தவர். பஞ்சுபோல் நரைத்த தலையும் முறுக்கு மீசையுமாக கம்பீரமாக அவர் இருந்தாலும் பார்க்கும் எவரிடமும் நன்மதிப்பு பெறத்தக்க கண்ணியமான தோற்றம். மற்ற அனைவரும் சிங்களர்கள். அவரின் பெயரில் ஐயா என்பதும் சேர்ந்திருந்ததால் அவரைத் தனியாக மேலதிக ஐயா அதாவது அண்ணன் என்று இரட்டை ஐயா சேர்த்தழைப்பது அவசியமில்லை எனக் கருதிய அந்த சிங்கள நல்லிதயங்கள் அவரை வீரய்யா என்றே அழைத்தனவென்றாலும் அதில் அண்ணா என்ற மரியாதை இருந்தது.

அவர்களுக்கிடையில் இருந்த ரிச்சர்ட் ஐயா தானே குழுவின் தலைவர்போல பேச்சுக்களில் முதன்மை வகிப்பதும் ஏனையவர்கள் அமைதி காப்பதும் அவர் கேலியாக எதையாவது உதிர்;;த்தால் மற்ற அனைவருமே இணைந்து சப்தமாகச் சிரிப்பதும் அந்த வீட்டைக் கலகலப்பாக வைத்துக் கொண்டிருந்தமையை அமலன் ஓர் ஓரமாக நின்றவாறே இரசித்துக் கொண்டிருந்தான்.

அந்த வேளையில்....
விட்டின் உள்ளறைக்குள் அமலனின் பெற்றோருக்கிடையில் குசுகுசு ஒலியில் தர்க்கம் நடந்து கொண்டிருந்தது. அமலனின் சகோதரிகள் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். அமலனின் தம்பி எங்கோ வெளியெ விளையாடப் போயிருந்தான்.

அமலனின் அப்பா அம்மாவிடம் நகையொன்றை அடகுவைக்க தேவை என்று கேட்பதும் அம்மா அதனைக் கவலையுடன் மறுப்பதும் பட்டும் படாமலும் கேட்கவே அவன் மெதுவாக அறையை நெருங்கியவாறே வெளியிலிருந்து உற்றுக் கேட்டான்.

„பூமா இந்த சனங்கள் நம்மை நம்பித்தான் இங்கே வருகிறார்கள். தினந்தோரும் நாம் கொடுக்கும் ரொட்டியும் டீயும்தான் அவர்களுக்கே முழுநாள் உணவு. அப்படி இருக்கிறது நிலைமை. நமது சேமிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நானெடுத்துக் கொடுத்து வந்த கடன்தான் அந்தக் குடும்பங்களும் பசியாற உதவி வந்தது. இப்போது அதுவும் கரைந்து வருகிறது. அதனால் சில நகைகளை அடகு வைத்து உதவினால் வேலை தொடங்கியதும் அவர்கள் திருப்பித்தர மீட்டுவிடலாம் பயப்படாதே!“

அம்மா விம்முவது கேட்டது. „மூத்த பிள்ளைக்காக சேர்த்த அந்த நகைகளில் கைவைத்தால் அவளது எதிர்காலமே பாதிப்படையக் கூடுமே! அதை யோசித்தீர்களா? நம்மிடம் இல்லையென்றால் அவர்கள் வேறு வழிகளில் தேடிக் கொள்ள மாட்டார்களா?“

„பூமா! அவர்களும் நம்மைப் போன்ற ஏழைகள்தாம் ஆனால் நேர்மையான ஏழைகள். அவர்களுக்கு உதவாவிட்டால் கடவுளே நம்மை மன்னிக்க மாட்டார்“

விவாதம் கடுமையாவதும் அதற்கு அடிப்படை உணவுக்கான சிக்கலை வந்திருப்பவர்களின் குடும்பங்கள் எதிh நோக்குவதும்தான் என்பது அமலனுக்குப் புரிந்தது.

சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தவனுக்குள் „பளிச்“ சென்று ஓர் எண்ணம் தோன்றியது. முன்பின் யோசிக்காமலே தனது பெற்றோர் பேசிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைநதானவன்.

„டேய் வெளியே போ! பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில்...“ அப்பா முடிக்கவில்லை.

„ பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுமென்றால் வந்து நுழைவதில் என்ன தவறு?“

அப்பாவின் முகத்தில் கோபம் தெரிந்தாலும் அம்மாவின் முகத்தில் ஏதோ ஏக்கமிகு எதிர்பார்ப்பு தெரிந்ததும் அமலனுக்கு தைரியம் தானாகவே வந்தது.

„அப்பா“ நான் சொல்கிறபடி செய்தால் அக்காவின் நகைகளை அடகு வைக்காமலே பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறேன்“

பெற்றோரின் முகங்களில் ஏதோவோர் ஒளி படர்வது அமலனுக்குப் புரிந்தது.

„ என்னடா சொல்கிறாய்?“ அப்பாதான் விளித்தார்.
அப்பாடா! அப்பா சரி வந்து விட்டார்.

அமைதியாகவும் தெளிவாகவும் மற்றவர்களுக்குக் கேட்டுவிடாதபடி மிக மிக மெல்லிய குரலில் தெளிவாகவும் அமலன் விளக்கினான்.

„அப்பா இந்தக் கடினமான நேரத்தில் நமது உணவுத் தேவைகளையெல்லாம் தீர்த்து வருவது உங்கள் நானா கடைக்காரர்தானே! அதே நானாவிடம் நீங்கள் சிபாரிசு செய்தால் அவரால் இவர்களுக்கும் கடனுக்குப் பொருள் கிடைக்க உதவலாமே!

அவருடனிருக்கும் உங்களின் நட்பு நன்றாக இருப்பதால் அவர் உதவ மாட்டாரென்று எப்படி நம்ப முடியும்? ஏதற்கும் முதலில் அவருடன் நீங்களே பேசிப் பார்த்தால் என்ன?

துள்ளி விட்டார் அப்பா. இருவர் முகங்களிலும் ரோசாப்பூ மலர்ச்சி.

„பூமா! நும்ம பயல் சொல்வது சரிவரும் என்றுதான் நினைக்கிறேன்.“ அமலனிடம் திரும்பி „நல்ல பிள்ளைடா நீ“ என்று தலையைத்தடவியவர் அடுத்த விநாடியே
முன்னறைக்குள் நுழைந்து எல்லாரையும் அரைமணி நேரம் அப்படியே இருக்கும் படியும் தாம் அவசரமாக வெளியே போக வேண்டுமென்றும் வந்ததும் சொல்வதாகவும் சொல்லிவிட்டு அமலனையும் அழைத்துக் கொண்டே நானா கடைக்குகு விரைந்தார்.

உசைன் நானா அப்பாவின் நெடுநாளைய நல்ல நண்பர். சொந்த சகோதரமாகவே ஒருவரையொருவர் நேசித்துப் பழகி வந்தார்கள். வேலை நிறுத்தம் தந்த பளு காரணமாக சில சிக்கல்கள் ஏற்பட்ட போது தானே முன்வந்து வேலைநிறுத்தம் முடியும் வரை கடனுக்கு பொருள் எடுத்துக் கொள்ளவும் பிறகு மெதுவாகக் கடனை அடைக்கவும் முன்மொழிந்த நல்ல மனிதரவர்.

அவரைச் சந்தித்ததும் அமலனின் அப்பா நிலைமையை மனந்திறந்து விளக்கியதுடன் அமலனின் முன்மொழிவைப் பற்றியும் சொல்லி அவரது கருத்தைக் கேட்டார்.

என்ன ஆச்சரியம்!
!           
„தோமஸ் சாச்சா! நீங்கள் சொன்னால் சரி. அத்தனை பேர் பெயரிலும் புஸ்தகம் போடுகிறேன். அவரவர் புத்தகத்துடன் வந்து வாஙகிச் செல்லட்டும். எனது கணக்கு அவர்களின் புத்தகத்தில் பதிந்திருக்கும். அதன்படி அவர்கள் கடனைக் கட்டி முடிக்கட்டும்.“

அப்பா மகிழ்ச்சியில் ஆடிப்போய்விட்டார். “அதுசரி எனக்கு நீங்கள் இன்னும் புத்தகம் போடவில்லையே! ஏன்?“


„மற்றவர்கள் கடன் திரும்பத் தராமல் போனால் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு புத்தகத்தை உங்களுக்குத் தருகிறேன். சரியா?“

இரு அன்புள்ளங்களும் இணைந்தே சிரித்துக் கொண்டன.

நானா அமலன் கைக்குள் சில இனிப்புக்களை வைக்கவும் உள்ளங்கையை மூடிக்கொண்டே அப்பாவுடன் விடைபெற்றான் அமலன். 

வுPடு திரும்பியதும் அமலனின் அப்பா திட்டத்தைப் பற்றி விளக்கினார். தமக்கேற்பட்ட பணநெருக்கடிதான் அதற்குக் காரணமென்றும் இனி பணத்தட்டுப்பாடு பற்றிய கவலையை விடும்படியும் தமது நண்பரிடம் அனைவரையும் அழைத்துச் சென்று ஆவன செய்வது பற்றியும் இதற்கு முக்கிய காரணம் தமது மகன் அமலனின் „ஐடியா“தான் என்றும் விபரித்தபோது அத்தனை குடும்பத் தலைவர்களும் நன்றியுணர்வுடன் அமலனைப் பார்க்க ரிச்சர்ட் ஐயா சொன்னார்:

„தோமாஸ் ஒன்ட ஆம்பள புள்ளக்கு கலுகுண்டு குடு! நாங் எங்கட புள்ளைக்கு குடுத்தது? அதுமாதிரி“

„அங்க்கிள் அது கல்கண்டு“ அமலன் சிரித்துக் கொண்டே திருத்தினான். அப்பா ரிச்சர்ட் ஐயா அம்மாவிடம் சொன்ன கதையை சிங்களத்தில் விளக்கவும் முழு அவையுமே நகைச்சுவை அலையால் கலகலத்தது.

பிறகு ஒருவர் ஒருவர் அமலனிடம் அவனுக்கு எஎன்ன பரிசு வேண்டும் எனக்கேட்டார். அமலன் சொன்னான். „தேன் டொபி“

அது  பத்து சதம். அப்போதைக்கு அது விலைகூடிய மிட்டாய். அதற்குள் தேன் அடக்கப்பட்டிருக்கும். அனைவரும் இணைந்து இரண்டு ரூபா சேர்த்து அமலனிடம் தர அவன் மகிழ்ச்சின் உச்சத்தில் திளைத்தான். பிறகு அதில் பங்கு கேட்ட சகோதரிகளுடான சிறிய சண்டை நடந்தமை வேறு கதை.

             ….................................................
                   
காலை ஏழு மணி.

கொழும்பு நகரின் நாலாபக்கங்களிலும் தமிழப் பொதுமக்கள் மீதும் அவர்களின் கடைகள் உடைமைகள் மீதும் கடுமையான தாக்குதல்களும் அவதூறுகளும்
பாதிப்புக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தமை பற்றிய செய்திகள் பலவும் பலரையும் பதட்டப்பட வைத்துக் கொண்டிருக்க அமலனின் தந்தை தோமாஸ் நெற்றியில் இடக் கை ஆள்காட்டி விரல் அழுத்த ஆ;ழந்த சிந்தனையில் இருந்தார். அவர் முன்னாலிருந்த தேநீர் ஆறிக் கொண்டிருப்பதை அதன் ஆவிக் கீற்றுக்கள் அறிவித்துக் கொண்டிருந்தன.

ஆபத்தான செய்திகள் வதந்திகளாகப் பரவி வந்தமை பெரிய கொடுமை!

நாசஞ் செய்வதே நல்லெண்ணம் என்னுமளவுக்கு கறை நிறைந்த அரசியல் ஆட்டங்கள் நாட்டை அலைக்கழிப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாமை அவரது நிம்மதியை வெகுவாகக் குலக்கிக் கொண்டிருந்தது.

அந்தக் காலைநேரத்தில். நாட்டின் ஆபத்தான  சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமலோ என்னவோ வேலைநிறுத்த ஆர்ப்;பாட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டிந்தது.

போக வேண்டிய சூழல் போக முடியாத சூழல் இரண்டும் மோதிக் கொண்டிருக்க தோமாஸ் தடுமாறிக் கொண்டிருந்தார்.

முன் கதவு தட்டுப்படும் சப்தம் கேட்டவர் எழுமுன்பே அமலன் திறந்து விட்டான். வுழமையாக வருபவர்கள்தாம். அனைவரும் ஒன்றாகவே வந்து நுழைந்தார்கள்.

ரோட்டிகள் சிறுமீன் குழம்புடன் பரிமாறப்பட அமலனும் அவனது அக்காவும் உதவிக் கொண்டிருக்கையில் ஒரு அன்பர் சிங்களத்தில் கேட்டார்.

„தோமஸ் கலவரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறதே! இன்றைக்குப் போகாவிட்டால் என்ன?“

„இதற்கான திகதி முன்னமே குறிப்பிடப்பட்டாயிற்று. ஆகவே நாம் தவிர்த்தால் நமது கம்பெனியின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பபடும் அதனால் பிரச்சினைகள் வரலாம்“ தோமாஸ்தான் சொன்னார். பேச்சில் அவரே அரைகுறை மனதோடேதான் பேசுகிறார் என்பது தெரிந்தது.

சிறிது நேரம் கலந்துரையாடல். புpறகு முடிவெடுக்க இயலா நிலையில் புது முடிவெடுத்தார்கள். தோமாஸ் ரிச்சர்ட் ஐயாவிடம் கட்சித் தலைமையகத்துக்குப் பக்கத்திலிருந்த பொதுத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி இன்று மட்டும் தவிர்க்க அனுமதி கேட்டுப் பார்க்கப் பணித்தார்.

ரிச்சர்ட் ஐயா டக்கென்று பதிலளித்தார். „நீயும் வந்தால்தான் நல்லது. நீதான் நமது குழுவுக்கு லீடர். அவர்கள் ஏதாவது கேட்க நான் தவறாக எதையாவது சொல்லிட்டால் நல்லதல்ல“

தொலைபேசி எடு;க்கச் சென்றவர்கள் இருவரும் ஒரு நல்ல செய்தியுடன் திரும்பி வந்தார்கள். முதலில் வந்து ஆhப்பாட்டத்தில் பங்கேற்கும்படியும் பிறகு பிரச்சினையான சூழல் வந்தால் தனியான கட்சி வாகனத்தில் வீடு திரும்ப வசதி செய்வதாகவும் தலைமையாகம் உறுதியளித்தது.

தோமாஸ் சிங்களத்தில் நன்கு பயிற்சி பெற்றவர் என்பதால் சலனமற்றவராக ஆயத்தமாகத் தொடங்கினார். ஆனால் வீரய்யா முகத்தில் கலவரம் தெரிந்தது.
சிங்களமே தெரியாத அவருக்கு ஆபத்து தலைமேல் தொங்குவதை அனைவருமே உணர்ந்திருந்தனர்.
ஆனால் பெரும்பான்மையாக தாங்களே இருப்பதால் எவராலும் ஆபத்து வராதபடிக்கு பார்த்துக் கொள்ளலாம் என அந்த சிங்கள உள்ளங்கள் முழுமையாக நம்பின.

„வீரய்யா நீங்க எங்க கூட வாறது. பயம் வாணாம். எங்கட உசுறு குடுத்துசரி ஒங்களை காப்பாத்துறது.“

வீரய்யா பயம் பரவிய முறுவலுடன் தோமாசைப் பார்த்தார். பூனையிடமிருந்து தப்பிக்க ஒரு சுண்டெலியிடம் உத்தரவாதம் கேட்கும் மற்றோர் எலியின் கதைதான்.

             ….............................................................

பதினொரு பேரடங்கிய வேலைநிறுத்தக்குழு வீரய்யாவை நடுவில் விட்டு சூழ சுற்றிப் படாந்தவாறு நகர்ந்து கொண்டிந்தது. நானா கடையைக் கடக்கும் பொது சிலர் அவரிடம் வெண்சுருட்டு(சிகரெட்) வெற்றிலை சிலர் சில இனிப்புக்கள் என வாங்கிக் கொண்டார்கள்.

தோமாஸ் நானாவிடம் மெதுவாகக் கேட்டார். „சாச்சா! உங்ககிட்டே எக்ஸ்ட்ரா தொப்பி ஒன்று இருக்கிறதா“

„எதுக்கு?“

„வீரய்யாவுக்குப் போட்டால் பாதுகாப்பாக இருக்கலாமே!“

நானா மறுக்காமல் ஒன்றைக் கொடுத்தார். „அடி கிடி விழுந்தா அல்லான்னுதான் கத்தணும். அம்மான்னு கத்திடக்கூடாதுன்னு சொல்லிவைங்க“ நகைச்சுவை போல எச்சரித்தார் நானா. நியாயங்தானே!

               ….........................................

கொள்ளுப்பிட்டி என்ற இடத்தில் கூட விருந்ததால் அனைவரும் குழுவாகவே வேகமாக நடந்து கொண்டிருந்தாhகள். வுழிநெடுக பாதைகளெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தனவே தவிர கலவரமாக எதுவும் தென்படாமை அனைவர்க்கும் ஆறுதலைத்தர அவர்கள் கால்பேஸ் என்ற பாராளுமன்றமிருந்த கடற்கரை வழியாக நடந்து கொண்டிருந்தார்கள்.

கடற்கரை எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தவர்கள் இன்னும் ஒரு மைலுக்குள் சேர வேண்டிய இடம் வந்துவிடும் என விரைகையில் ஓர் அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்தது.

சுமார் ஏழுபேர் கொண்ட கும்பலொன்று ஆயுதஙகளுடன் அவர்களைச் சுற்றிவளைக்கவும் சிங்களவர்களான இவர்களின் குழுவுக்கே ஒருவிதமான பதட்டும் வந்துவிட்டது.
அந்தளவுக்கு பயந்தரும் கூச்சலும் கெட்ட வார்த்தைகளுமாக காடையர்கள் சூழவும் அனைவரும் இறுக்கமாக இணைந்து நின்றார்கள். வுந்தவர்கள் இவர்களுக்குள் தமிழர் யார் தமிழர் யார் எனக்கத்தினார்கள்.

அமலனின் தந்தை சிங்களத்தில் நன்கு பரிச்சயமுள்ளவர் என்றாலும் அந்தச் சூழ்நிலையில் செயலிழந்தே விட்டாரவர் எனலாம்.

அவர்களில ஒருவன் நடுவில் நின்றிருந்த வீரய்யாவை அடையாளம் கண்டு கொண்டான். மற்றவர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே பாய்ந்த அவன் அவரைச் சட்டையைப்பிடித்து இழுத்து „இதோ ஒரு பறைத் தமிழன்! கொல்லுங்களடா!“ என்றவறே வீரய்யாவின் முகத்தில் குத்தவும் அவர் ஆவென்று அலறியவாறே விழுந்துவிட்டார்.

அவர்களின் அதிர்ச்சியான நிலையைச் சுதாகரிப்பதில் இந்தத் திடீர்ப் பதற்றத்தினால் தாமதம் ஏற்பட்டது. அத்துணை வேகமாகவும் ஆத்திரத்துடனும் வெறியுடனும் இயங்கிய கலகக் கும்பல் கொலை செய்வதில் அதிக இன்பம் காண்பது போல் தெரிந்தது.

ஓரு வெறியன் ஒரு பாரமான கல்லைத் தூக்கிக் கொண்டு ஓடிவர மற்றர்கள் „மறப்பாங்! மறப்பாங்! (கொலை செய்! கொலை செய்!) என்று கூச்சலிட அந்த அனைவரும் அதிர்ந்த வேளையில் ரிச்சர்ட் ஐயா தைரியமாக முன் வந்து கல்லோடு வந்தவனை வழி மறித்து நிறுத்தினார்.

„அறிவிக்கிறதாடா உனக்கு? நாங்களும் நல்ல பௌத்த சிங்கவர்கள்தான். உன்னை விட எனக்கு பௌத்தம் பற்றித் தெரியும். முதலில் சொல் ஏனடா அந்த மனிதன் தலைமேல் கல்லைப்போட்டுக் கொல்ல நினைக்கிறாய்?“

கல்லைக் கையிருந்து இறக்காமலே அவன் அதே வெறியுடன்
„அவன் ஒரு தமிழன் அவனைக் கொல்ல வேண்டாமென்று சொல்ல உனக்கு வெட்கமில்லையா?

ரிச்சர்ட் ஐயா திமிறி நின்றார். „அவர் தமிழரல்ல என்று கூடத் தெரியாத நீ எப்படி சரியாய் வேலை செய்வாய்?

கலகக்கும்பல் ஐயத்துடன் தயங்கியதும் கடுமையான தொனியில் ஆனால் பக்குவமான சிங்களத்தில் ரிச்சர்ட் ஐயா சொன்னார்:

„இவர் தமிழரல்ல கொச்சியன்! உங்களுக்குக் கொச்சியனகளைத் தெரியுமா?“
கூட்டம் விழித்தது.

„கொழுமபிலும் நீர்கொழும்பிலும் இரண்டு இ;டங்கள் கொச்சிக்கடை என்று இருப்பது தெரியுமா? உங்கள் தாத்தாவுக்கும் தாத்தா பிறந்த காலத்தில் கடைவைத்து சோறு சமைத்துக் கொடுத்து உதவின சனம்தான் கொச்சியன்கள்.


இவர்களின் மொழி என்ன என்று பக்குவமாகக் கேட்டான் ஒருவன்.

„அப்படிக் கேளு அது நியாயம். இவர்கள் பேசுவது இந்தி. திலிப்குமார் படம் பார். தெரியும்“

தாங்கள் பிழையாக அடித்துவிட்டதாகச் சொன்ன ஒருவன் அவனே அவரைத் தூக்கிவிட ,சரியான ஆட்களப்பா நீங்கள்!“ என்பதுபோல ஒருவித சிலேடையுடன் கையை அசைத்து விட்டு அவர்கள் பதற்றமில்லாதவர்கள் போல தொடர்ந்து நடந்தார்கள்.

கோஞ்ச தூரம் கடந்ததும் தோமாஸ் ரிச்சர்ட் ஐயாவிடம் சொன்னார்.

„; ரிச்சர்ட்! நுP இவ்வளவு தைரியமாகவும் சமயோசிதமாகவும் நடந்து கொண்டதால்தான் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பினோம். ரொம்ப நன்றி.  சரி..கொச்சியான்கள் பேசுவது என்ன பாஷையென்று சொன்னாய்?“

தோமாஸ்! எனக்கே தெரியர்துதான் என்றாலும் டக்கென்று பதில் சொல்லாட்டி ஆபத்து வீரய்யாவுக்கு வருமே! இதுதான் இந்தி என்றேன். அதுசரி கொச்சியான் பாஷை என்னது தோமாஸ்?“

„அதுக்குப் பேர் மலையாளம்“

„மலைபாலம்?“

„மூக்கிலே குத்துவேன். மலையாளம்“  தோமாஸ் கேலியாக முறைக்க மற்ற அனைவருமே (வீரய்யா உட்பட) கலகலத்தவாறே நகர்ந்தார்கள்.

திரும்பிச் செல்ல வாகனம் கிடைக்கவிருப்பது பெரிய ஆறுதல் அனைவருக்கும்.

இனப் பகைமையால் ஊரெரிய இனஇணைவால் இனிமையுணர்வுடன் நகர்ந்தது
அச்சிறிய மக்கள் கூட்டம்.

இலங்கைத்தாய் இதயம் கனத்து அழுதிருப்பாள்!