புதன், 8 ஜனவரி, 2020

இயற்கை எச்சரிக்கும்

தடங்களில் திரும்பினால்...5



„ஆவ் ஆவ் அம்மா இன்று பளபளவென்று மின்னுகிறார்கள்“

புது வருடப் பிறப்புக்கான நடுநிசி வழிபாட்டிற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த எங்கள் குடும்பத்தில் நிலவிய கலகலப்பிற்கு மத்தியில் அம்மா அன்று உடுத்தியிருந்த நாவல் நிறப் பட்டுச் சேலையும் அதனில்  படர்ந்திருந்த வெள்ளி அலங்காரப் பதிப்பின் அமைப்பும் சில அணிகலன்களேயாகினும் அவற்றின் மனதைக் கவர்ந்த மெருகும் அதற்கு மேலும் அழகூட்டிய அம்மாவின் புன்னகை தவழ்ந்த முகத்தின் குளுமையும் அப்பப்பா!  நான் அம்மாவின் அழகில்  மயங்கியே போயிருந்தேன்.

எல்லாருமே புத்தாடையில் இருந்தாலும் அம்மா அன்று தனித்துவமாக அழகுடன் இருந்ததாக எனக்குப் பட்டது. அது ஏன்? தெரியவில்லை.

நடுநிசிக்குச் சற்று முன்னதாகவே துவங்கிவிட்ட திருப்பலி ஆராதனையின் நடுவே சரியாகப் பன்னிரண்டு மணிக்குப் புதிய ஆண்டு பிறந்துவிட்டதைத் திருத்தந்தையான குருவானவர் nதிவித்தபோது ஆலயத்துள் பெரும்பான்மையோர் மிகுந்த பக்தியுடன் புத்தாண்டில் தத்தமது குடும்ப மற்றும் உறவுகள் பற்றியும் அவர்களின் நலன் பற்றியும் இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவதும் அதே சமயம் வெளியே செவி அதிர வெடிகளும் வாண வேடிக்கைகளுமாக நகர் இருளகற்றி ஒளி படர்ந்து வண்ணங்களும் புகையும் மருந்து மணமுமாக கலகலப்பதை கோவில் சன்னல்கள் வழியாக ஒரு பகுதி இரசித்துக் கொண்டும் இருக்க பலி பூசை தொடர்ந்தது.

பூசை முடிய மக்கள் வெளியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துவதும் கைகுலுக்குவதும் „ஸ்தோத்திரம்“ என்று பெரியவர்களிடம் ஆசி பெறுவதும்  நடந்தபின் குடும்பங்கள் வீடு திரும்பின.

எங்கள் குடும்பம் வீட்டுக்கு வந்ததும் வழமைபோல எல்லாரும் மீண்டும் ஒரு முறை சிறிய குடும்ப செப ஆராதனையில் ஈடுபட்டு விட்டு ஒரு சிறிய உணவருந்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில் உடை மாற்றச் சென்ற அம்மா ஓர் அதிர்ச்சியுடன் கண்கலங்க வந்து நின்றார்கள்.

எல்லார் முகங்களிலும் அதிhச்சி
„என்னம்மா! என்னது?“

„எனது கால் கொலுசுகளில் ஒன்றைக் காணவில்லை. கோவிலில் கழன்று விழுந்து விட்டது போல் தெரிகிறது“

அம்மாவின் கண்களிலிருந்த ஆழமான கவலை என்னை என்னவோ செய்ய
தம்பியை அழைத்துக் கொண்டு நான் கோவிலுக்கு ஓடினேன்.

கொஞ்சப் பேர் இன்னும் இருந்தபடியால் கோவில் திறந்திருந்தது. எங்கள் குடும்பம் இருந்த இடம் மற்றும் திரும்பிய வழி போதாதென்று முழுக் கோவிலையுமே சுற்றிச்சுழன்று தேடியும் கிடைக்கவில்லை. எனவே வருகிற வழியெல்லாம் தேடித்தேடி அலைந்தோம்.

ஓரு மணி நேரமளவு தேடுதலின் பின் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம்.
அம்மாவின் கவலையைப் போக்க எனக்குத் தெரிந்த ஒரு கருத்தைச் சொன்னேன்.

„வெள்ளிக் கொலுசுதானே! பழசைக் கொடுத்துவிட்டு புதிதாக ஒரு சோடி வாங்கி விட்டால் போச்சு. நாளைக்கு அல்லது நாளை மறுநாள் வாங்கி விடலாம். கவலையை விடுங்கள்“

அப்பாவும் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி அமைதியாக இருக்கவும் கவலைப்பட எதுவுமில்லை என்றும் அனைவரும் தூங்கலாமென்றும் காலையில் நேரத்துக்கு எழும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ள அனைவரும் துயிலப் போனோம். ஆனால் ஏனோ இலகுவாக அந்த வருட முதல் நாளில் எங்களுக்குத் உறக்கம் வருவதில் பெரும் சிரமமிருந்தது.

எல்லார் மனங்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. நானும் தம்பியும் கொலுசைத் தேடிச் சென்ற வேளை வீட்டில் பலவிதமாகக் கருத்துப் பரிமாற்றம் நடந்திருந்தது போலவும் தெரிந்தது. ஏனோ எல்லார் மனங்களும் மிகவும் புண்பட்டு இருந்தன.

               ….........................................

பொழுது மலர்ந்ததும் பக்கத்துவீட்டு உறவினர்கள் அயலவர்கள் எனப் பலரும் வந்து வந்து வாழ்த்தவும் நாங்களும் கலக்கவும் வீட்டிலிருந்து பிற மத அயலவர்களுக்குப் பலகாரம் சாப்பாடு நாங்கள் எடுத்துப்போக அவர்களில்ல வகைகள் இங்கு வர இப்படி அன்புச் சம்பிரதாயங்களில் மூழ்கி ஊறிய எல்லாரும் முந்திய இரவு அதிhச்சியை கிட்டத்தட்ட மறந்தே போனோம்.

மத்தியானம் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு வெடி கொளுத்துவது நடந்தது. சில வீடுகளில் வெடி இருக்கும் பற்ற வைக்க ஆளிருக்காது. அந்தப் பெரியவர்கள் சார்பாக உதவும் பாவனையில் இளவட்டங்கள் நாங்கள் அவற்றைக் கொளுத்தி அவர்களையும் எங்களையும் திருப்திப்படுத்திக் கொண்டோம். நானும் எனது பங்கைச் செய்த பின் வீட்டுக்குள் நுழைய எல்லாரும் சாப்பிட ஆயத்தமாகி இருந்தார்கள்.

அப்போதுதான்  அம்மாவின் முகத்தில் இன்னும் களை குறைந்திருந்ததைக் கவனித்தேன். புன்முறுவல் இருந்தது ஆனால் புண்பட்ட முறவலாக இருந்தது.

சரிதான்! அம்மாவுக்கு இன்னும் கொலுசின் கவலை அப்படியே இருக்கிறது போலும். சிறிது கழித்து அம்மாவிடம் பேசுவோம்.

நான் முடிவெடுத்துவிட்டு மூன்று மூன்றரை மணியளவில் வெளி சன்னல் இருந்த அறையில் அம்மா தனியாகப் பாதையைப் பார்த்தபடி இருப்பதைக் கண்டுவிட்டு நெருங்கினேன்.

தற்செயலாகக் கவனித்தேன். அம்மாவின் காலிலிருந்த தனிக் கொலுசைக் காணவில்லை.

„அம்மா கொலுசைக் கழற்றி விட்டீர்களா?“
அம்மாவின் கண்கள் வீட்டில் இருந்த சிறிய சுரூப கூடு எனப்படும் சுவரில் தொங்கிய இயேசுவின் சொரூபம் இருக்கும் இடத்தைக் காட்டியதும் நான்
திரும்பிப் பார்த்தேன். அச்சுரூபத்தின் பாதத்தில் கொலுசு மடங்கிக் கிடந்தது. அம்மாவின் கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வழியவும் நான் பதறி விட்டேன்.

„அம்மா இந்த சின்ன விடயத்துக்கு இப்படிப் பதற வேண்டியதில்லையே! நாளைக்கே புதிது வாங்கினால் எல்லாம் சரியாகிவிடுமே!“

„இல்லைய்யா! எனக்கென்னவோ ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிடும் போல மிகவும் பயமாக இருக்கிறது“

எனக்குக் கோபமே வந்துவிட்டது.
„என்னம்மா இந்த நாகரீகமான காலத்திலும் இப்படி மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கொண்டு..... யாரும் கேட்டால் சிரித்துவிடப் போகிறார்கள்“

அம்மா தனது விழிவழிந்த நீரைத் துடைத்துக் கொண்டவர்  மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் என்னிடம் பேசினார்கள்.

„மகன் இயற்கை எதையுமே சொல்லாமல் செய்வதில்லை. அதனை உணர்ந்த நம் முன்னோர்கள் பலதையும் பல விதங்களில் பாமர மக்களுக்ப் புரியும் விதமாகச் சொன்னைதை அரைகுறையாகப் புரிந்து கொள்வது சரியல்ல.
அம்மா எதைச் சொல்கிறார்கள்?
நான் முழிப்பது அவர்களுக்குப் புரிந்தது தெரிந்தது.

„இன்றைய நமது அறிவாளிகளெல்லாருமே தாம் மற்றவர்களிடமிருந்து கற்றவற்றை மாற்றிச் சொல்லிப் புகழ் தேடுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நமது மூதாதையர்கள் தாம் கண்டு அனுபவித்துப் பெற்ற பட்டறிவு உண்மைகளைத்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள். உனக்கு நான் சொல்வது புரியக் கடினமாயிருக்கிறதல்லவா? கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!“

பாய்ந்தோடிச் சென்று தண்ணீர்ச் சொம்புடன் திரும்பினேன். மடக்மடக்கென்று அருந்தியவர்கள் சற்று நிதானமாக மாறியது தெரிந்ததும் பெரிய ஆறுதல் எனக்கு.

அம்மாவிடமும் எனது சீயானிடமும் (தாத்தா) கற்றவற்றை எனது நண்பர்களிடத்தில் அவிழ்த்துவிட்டு பெரிய அறிவாளியாக நாடகமாடிய எனது சின்ன வயது கலையைத்தான் அம்மா சொல்வது போல எனக்குள்ளேயே ஒரு வெட்க உணர்வு. பொறுமையைத் தவிர வேறு வழி?

„கவனமாகக் கேள் மகன்;. மனிதரைத் தவிர மற்ற உயிர்கள் அனைத்துமே இயற்கையை எப்போதும் மதித்து நடப்பதால் அவற்றுக்கு இயற்கையின் எச்சரிக்கைகள் இலகுவாகப் புரிந்துவிடும் சக்தி இருப்பதும் மனிதர்கள் அதை மீறி நடப்பதும்; அதன் எச்சரிக்கையை அலட்சியம் செய்வதும்தான் நம்மிடம் எதையும் புரிந்து கொள்ளாமல் தவறாகக் கணித்துவிடும் பலவீனத்தையும் வளர்த்திருக்கிறது.“

„ அப்போ பகுத்தறிவுக் கருத்துக்கள் பொய்யா?“
„புரியாமைகள் பகுத்தறிவு அல்ல“
நான் தடுமாறுவது அம்மாவுக்குப் புரிந்தது தெரிந்தது.

„கவனமாகக் கேள்! நாம் வளர்க்கும் ஆடு மாடு கோழி பூனை நாய் மட்டுமல்ல காட்டிலேயே வசிக்கும் விலங்குகள்கூட இயற்கை அனர்த்தம் வரப்போகுதென்றால் முன்கூட்டியே அதை உணர்நது அலறியடித்துக் கொண்டு தப்பியோட முனைவதும் அதைக் கண்டுதான் மனிதர்களில் அறிந்தவர்கள் பாதுகாப்பைத் தேடுவதும்தான் எங்கும் நடக்கிற உண்மை தெரியுமா?“ அது எனக்குப் புதிய செய்தி.

பெரும் புயலோ பூகம்பமோ இயற்கை அனர்த்தமோ வரப்போகுதென்றால்
நமது வீட்டு விலங்குகளும் கூட அதை உணர்ந்து கொள்ளும் தெரியுமா?“

„அப்படியா?“ புதிய பாடமொன்று கற்ற மாதிரி ஒரு நிறைவு எனக்கு.

„அதற்கும் கொலுசுக்கும் என்ன சம்பந்தம்? அதை நம்புவது மூடத்தனம்தானே!“

முதல் தடவையாக அம்மா வாய்விட்டுச் சிரித்தார். அப்பாடா என்றிருந்தது எனக்கு.

அப்படி இருக்கவேண்டும் என்பதுதான் எனக்கும் உள்ளுக்குள் இருக்கும் உணர்வு. ஆனால் கொலுசு வெள்ளியல்லவா அதுவும் அது ஓர் இயற்கைப் பொருளல்லவா? அதனால்தான் உள் மனம் அச்சப்படுகின்றது“

„வெள்ளிக்கு உயிரில்லையே!“

„சரிதான் ஆனால் அதுதானே அழகையும் மதிப்பையும் மரியாதையையும் தருகின்றது? அப்படியென்றால் அதனுள் ஏதோ சக்தி உண்டென்று நம்பலாமா கூடாதா?“

அம்மா தொடர்ந்தார்.“ இயற்கையால் வந்த எதுவுமே உருமாறுமே தவிர அழிவதில்லை. நாமும்தான். இதை நீ வளர வளர புரிந்து கொள்வாய். இப்போதைக்கு இது குருவி தலையில் பனம் பழத்தை வைக்கிற கதை. ஆகவே விட்டுவிடுவோம்.“

அட்சர கணித ஆசிரியரிடம் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மாணவனைப்போல நான் நின்றேன். அம்மா கடைசியாக ஒரு சின்ன விளக்கம் தந்தார்கள்.

„இந்த நல்ல சகுனம் அபசகுனம் என்பதில் பல nhபாய்களுமிருக்கலாம் சில உண்மைகளும் இருக்கலாம். நீ என்ன நினைக்கிறாய்?“

„இது நியாயமான சிந்தனை என்று நினைக்கிறேன்.“

„அப்படியென்றால் நீ ஆண்டவரிடம் ஆபத்தேதும் நம் வீட்டுக்கு வந்துவிடாமல் கேட்டு மன்றாடு மறக்காதே! அவரது சித்தத்தின்படி நடப்பது நடக்கட்டும்.“

இது நடந்த ஆண்டு ஒரு லீப் வருடம் மாசி மாதம் 29 வரை நீளும் வருடம். சரியாக ஆறு நாடகள் கடக்கையில் அம்மா திடீரென்று கடும் வயிற்றுவலிக்காளானார்கள். பல சிகிச்சைகளும் பயனின்றி பதினைந்தாம் நாள் ஓர் அறுவை சிகிச்சையுடன் உலகை விட்டு மறைந்தார்கள்.

அம்மா முன்னுணர்ந்த உணர்வு இயற்கையா மூட நம்பிக்கையா தற்செயலா எதையுமே என்னால் உணரவோ விளக்கவோ முடியாத நிலையில் கார்மேகத்தில் தாகந்தீர்க்க நீர் தேடிப்  புகுந்தலைந்த ஒரு பறவைபோல அர்த்தமில்லா முயற்சிகளுடன் அன்றிலிருந்து இன்றுவரையும் கூட அவர்களின் நினைவில் உங்களில் பலரையும் போல் நானும் வாடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தக் கால கட்டத்தில் ஒரு நாள் என் அலுவலகத்துக்குள் வந்த எனது அதிபரின் தம்பி என் முன் வந்து அமர்ந்தார். நல்ல நகைச்சுவை ததும்பும் மனிதராவர்.

„ஆமாடே! நீ கவிதை எல்லாம் எழுதுவியாமே!“
„அங்க்கிள் நக்கலடிக்காதீங்க!“
„இல்லேப்பா நானொரு மெட்டு சொன்னா டக்குன்னு ஒரு பாட்டு எழுதித் தருவியா?“
„டக்குடக்குடக்குன்னு எழுதினா போதுமா?“
இது போட்டி. முடியுமா முடியாதா?“
„உங்களுக்கு சரியா பாட முடீயுமா முடியாதான்னு முதலில் பார்ப்போம்“

அருமையான குரலில் ஒரு மிகப்பழைய இந்திப்பாடலை முணுத்தார்.(அது அப்போதே மிகப் பிரபலமாகியிருந்தது)~

„ஹாயேகா..ஹர்யேகா..“ என்று வரும்                                          மிகப் பழைய லதா மங்கேஷ்கர் பாடிய பாடலது.

இருவருக்கும் இந்தி தெரியாது.ஆனால் இராகத்தை அவர் முணுமுணுக்க் நான் மடமடவென்று எழுதி முடித்தேன். அவர் மெட்டை நிறுத்த நான் பாடலை எழுதி முடித்து நீட்டினன்.

அவர் மகிழ்ச்சியில் அதிர்ந்து போனார். ஆனால் எனது சிரமமின்னைக்கு அதிமுக்கிய காரணம் அது என் அம்மாவை மனதில் வைத்து நான் எழுதியதால்தான்.

இதை வாசித்தால் நிச்சயம் அழுவார். ஏனெனில் அதனை அவரே அதே மெட்டில் தமக்குள் முயன்று பாடியபின் அழுதுவிட்டார்.

„என் ஆத்தாவை (தாயாரை) நினைக்க வைத்து விட்டாயடா நீ“ எனறு அமைதியாகக் கண்ணீர் விட்டார் அந்த நல்ல மனிதர்..

அதன்பிறகு அந்தப்பாடல் என் இதயத்திலும் பதிந்து விட்டது.
கூகுளில் தேடினால் இந்தப் பாடல் உடனே வரும். தாயை இழந்த எந்தச் சகோதரமும் வயது வித்தியாசமின்றிப் பாடிப் பாருங்கள்.

அது நம் குரலாகவே ஒலிக்கும் என நம்புகிறேன்.

அந்தப் பாடல் வரிகள் இவைதாம்.

அன்னையே.. அன்னையே...உன்னையே
அம்மா என்றே அழைத்தேன்  இல்லையே இல்லையே இல்லையே

என்ஊன் உயிர்நீ என்றே – உன்
உறவில் உல..கில் வந்..தேன்
தாய்நீ இல்லாமல் இருந்..தால்
வாழ்வே இல்லாது இருந்திருப்பேன்
அன்பே என்னாசை அம்மா..
வருமா அந்நாட்கள் மீண்டும்
மரணம் வந்தாலும் நெஞ்சம்
மறக்காது தன்னில் வைக்கும்.. (அன்னையே...அன்னையே...)

சில வரிகள் - சில சொற்கள் -  சில கருத்துக்கள் _ சில சமயங்கள் வாழ்வின் நிழலாகித் தொடர்வதே இயற்கையின் இனிய விதி என நம்பலாமா?

எச்சரிக்கை எதுவென்று அடையாளம் காணுதற்கு
எச்சரிக்கும் முன்நடக்கும் உவர்க்கின்ற சம்பவங்கள்
எச்சறுக்கும் மண்வழியில் வருவதற்கு முன்னுணரும்
எச்சரிக்கை இயற்கையுடன் இணைவருக்கே நின்றுதவும்

பட்டறிவில் பதம்நிறைத்துப் பக்குவமாய்ச் சொன்னவர்கள்
தொட்டவற்றில் பதிந்துணரும் தெளிவுதனைப் பெற்றவர்கள்
பட்டதெதோ கண்ணருகில் அதைமட்டும் உண்மையெனப்
பட்டுணரா அறிவுஉளார் பகுத்தறிவாய்ப் பரப்புவர்கள்

கண்ணுக்கே தெரியாமல் நமைச்சுற்றிப் பலகோடி
கண்முன்னே இயங்கிடினும் இலையென்பர் பலகோடி
மண்ணிற்கு மேல்நின்றும் மண்ணின்உள் முழுதறியார்
விண்ணினையும் வளைத்திடலாம் எனநினைப்பின் அவர்பேடி

படைத்தவனின் சித்திரங்கள் வகைவகையாய் இயற்கையதாய்
படைப்;புகளின் செயல்வழியில் எதிரெதிராய்ப் பலன்தருதாய்
இடைவிடாது இயங்குவதை இயன்றவரை தெளிந்துணர்ந்தால்
நடைபெறுமெச் சம்பவமும் விதமமைந்த தெனஉணர்வாய்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக