ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கண்திறப்பாய்! எச்சரிக்கை! கண்திறப்பாய்!




பலவீனம் ஆனகூட்டம்கூடி வந்து நின்று
பலவீனன் என்று உன்னை அச்சுறுத் தலாம்
பலகாலம் பழகினவர் என்று சொல்லிக் கொண்டு
பலம்காட்டி உன்னுரிமை பறிக்க முயலலாம்

எதன்மீதும் ஆதாரம் உள்ளதென்ப தாய்
எதையெதையோ தனதேயென்றும் கூவிநிற்கலாம்
எதனையுமே புரிந்திடாமல் தயங்கிநின்றையேல்
பதைபதைக்க வைத்துஉன்னை வெளியில் துரத்தலாம்

உன்னை வைத்துன் கண்ணைக்குத்தும் தந்திரர்களை
உன்மனமே தெய்வர்போல எண்ண வைக்கலாம்
உன்மனதில் தெளிவுவரா விதத்தில் அனைத்திலும்
உன்இனத்தைப் பலவிதமாய்ப் பிரித்துச் சிதைக்கலாம்

கண்ணிருந்தும் இருளில்நின்று என்ன காணுவாய்?
கண்திறந்து ஒளிபிறக்க வழியைத் தேடுவாய்!
புண்படுத்திப் பிறரில்உன்னை உயர்த்தத ;தேடினால்
கண்ணிருந்தும் குருடனாகி அழிவில் சேருவாய்!

இறைவன் செய்ததாகமக்கள் நெஞ்சில் நாசத்தை
அறைந்துவைத்த அன்னியனே இன்றும் ஆள்கிறான்
பறையுமவன் வேதம்சொல்லும் பேதம் காணலேல்
உறையும்பனி எரியும்என்றும் நம்பச் செய்குவான்

ஏழைகளை எழும்பிடாமல் அடக்கும் பாதைகள்
கோழைகளாய் அவரைஆக்கி அடக்கச்செய்த தில்
ஆளைப்பார்த்து பதவி சேர்க்கும் கள்ளஞானிகள்
ஆளும்நிலை மாறவேண்டும் தெளிந்துநிமிருவாய்!

போட்டிபோட்டு வெல்லஇயலா போலியர்களே
போட்டி தவிர்த்து வெல்லபல சதியும் செய்குவார்
உழைத்திடாமல் பிறரின் உழைப்பில் வாழநினைப்பரே
உழைப்பர் கற்கத் தடைவிதித்தல் வேதம் என்னுவார்

பெரியகப்பல் மூழ்கலுக்குச் சிறிய ஓட்டைகள்
பெரியதேசம் வறுமைசூழ சிறியசாதிகள்
வறியவரை அடிமைகொண்டு வாழும்பாவிகள்
பெரியவராய்க் கருதினையோ நாடு மூழ்கிடும்