புதன், 15 மே, 2013

சிந்தனைக் கூறுகாய் 15

                                                         


141.துயிலுமுன் பஞ்சணை தரும்சுகம் துயின்றதும் நமைவிட்ட கன்றுபோகும்
இதயத்து ஆசைகள் காலத்தின் மாற்றத்தால் இல்லாமல் மறைந்துபோகும்

142.இருக்கையில் பிரிவதன் துயர்தரும் பாரங்கள் இறந்தபின் மறைந்துபோகும்
இழப்பதே இறுதியில் எவருக்கும் நிரந்தரம் என்பதேஅதன் உண்மையாகும்

143.ஒழுக்கத்தில் மிகநல்ல ஒழுக்கமாய் உள்ளது எதுவென்று சொல்ல வந்தால்
அழுக்கறவே இல்லாது அன்பினைத் தொடருதல் மட்டுமே என்று சொல்வேன்

144.கழுகொன்றின் முட்டையில் கிளிக்குஞ்சு பொரிந்திடல் என்றைக்கும் நடந்திடாது
ஒழுக்கத்தின் விரோதிகள் விதிக்கின்ற பாதைகள் விடிவினைக் காட்டிடாது

145.வள்ளுவர், ஒளவையார் வழிநூறு ஆயிரம் அறிவுரை குவிந்தபோதும்
கள்வரே பெரும்பாலும் அவைவைத்து வளர்வதால் பயனின்றிக் காலம்போகும்

146.மெதுவாகச் செய்தாலும் ஒருநாளில் ஒரு நன்மை ஒருகோவில் கட்ட லாகும்
பதமாகச் செய்தாலும் சதிசெய்து உயர்வாயேல் பாதகம் பதிவிலாகும்

147.நோக்கத்தில் பிழைவைத்துக் குறைதேடி அலைபவன் சமுதாயக் கழிவுக்கூடம்
ஆக்கத்தை விழைந்துநல் மனத்தோடு சுட்டுவன் தனிமனித அறிவுக்கூடம்

148.வாழ்வதற்காகவே உண்பரும் உண்பதற் காகவே வாழ்வரும் யார்?
வாழ்கின்ற மக்களுள் மனிதரும் மக்கள்போல் கலந்துள்ள மாக்களும்தான்.

149.பேய்களைக் கண்டுநான் அஞ்சவே அஞசிடேன் ஏனெனில் பேய்களென்னைச்
சூழவே நின்றாடும் வாழ்க்கையை அனுபவம் தந்ததால் கற்ற உண்மை

150.நாய் ஓட, மாடோட, மக்களுடன் நானோட,படர்தூசி  உணரவில்லை
தாய்:நாட்டில் சில நாட்கள் நடக்கையிலே நானடைந்த மகிழ்ச்சியிங்  கெனக்கு இல்லை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக