செவ்வாய், 28 மே, 2013
எண்ணங்கள் பண்ணிசைத்தால்....
உண்மையைஉரைக்க நீ அதற்காக உனக்கான
உண்மையில் உறுதியைக் கொள்!
கண்ணொப்ப நுன்னுயிர் துச்சமே எனஉந்தன்
எண்ணத்துள் நிறைந்தென்றும் நில்!
திண்மையின் தன்மையை உடலல்ல எண்ணத்துள்
உண்மைசார் உள்ளம் காட்டும்
எண்ணற்ற படைகளும் கொடுமனச் செய்கையும்
உண்மைமுன் தோற்றே தீரும்!
வண்ணங்கள் கிண்ணத்துள் விதங்களாய் நிறைந்தாலும்
எண்ணத்துள் ஓவியம் இன்றேல்
வண்ணங்கள் சித்திரக் கருவாகும் படைப்புதன்
நுண்மையை இழந்துபோகும்
உண்மையாய்ப் பொய்மையை இனங்காட்டும் பேராற்றல்
உண்மையைக் கொன்றதுண்டா?
மென்மையாய் நடந்தாலும் திண்மையில் தளர்ந்ததாய்
என்றுமெங்கும் நடந்ததுண்டா?
பண்பற்ற பாதகர் கைகளால் சனநாய கம்இன்று
புண்பட்டுத் துடிப்ப துண்மை!
கண்கெட்ட குருடரால் தடுமாறும் உலகைநாள்
கண்மீட்டுக் காக்கும் உண்மை!
எண்ணங்கள் பண்ணிசைத்தால் இதயமதுமிணைந் ததனுள்
உண்மைகள் உயிர்மை கொள்ளும்!
எண்ணங்கள் எழுவதுபோல் விரிவாதற் குதவுவமேல்
எண்ணங்களும் நனவு காணும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக