ஞாயிறு, 23 ஜூன், 2013
சும்மா சில வரிகள் 2
21. வேதனையைத் தாங்கிக்கொள். அது இதயத்தை இலகு படுத்தும்.
வேதனையைப் பிறருடன் கலந்து கொள். பாடம் கிடைக்கும். பொய்யாகச் சூழுகின்ற நண்பர்களை இழப்பாய்.
22. புகையிலையின் நட்பு மரணத்துக்கு அழைப்பு. தீயவரின் நட்பு
பாவத்துக்கு அழைப்பு.
23. தவறுகளை மறுக்கும் துணிவின்மையை மறைக்கத்தான் மனிதன்
மனம் பலவீனமானது என மழுப்புகிறான்.
24. அழகாக எழுதுவதற்கு மொழி அறிவு வேண்டும். அழகாகத்
தோன்றச் செய்ய கலையறிவு வேண்டும். அழகாக
வாழ்வதற்கு நல்லொழுக்கம் வேண்டும்.
25. இரு முறை நாம் ஒன்றை வலியுறுத்த நேர்ந்தால் முன்னிற்பவர்
ஒன்றில் செவிடர் அன்றில் பாமரர் என்று பொருள். மும்முறை
முயன்றால் ஒன்றில் முன்னிற்பவர் குருடர் அன்றில் மடையர் என்று
பொருள். அதற்குமேலும் முயன்று தோல்வி வந்தால் முன்னிற்பவர் வெறுந்தலைக்கனமுள்ள முட்டாள் என உணர்ந்து விலகுங்கள்.
26. வாய்க்கு இரண்டு உதடுகள், வாழ்க்கைக்கு இரண்டு உயிர்கள்,
காலத்துக்கு இரண்டு பிரிவுகள் ஏன்? இரண்டின்றி ஒன்றென்று
ஒன்றில்லை என்பதால்தான்.
27. வறுமையென்பது பொருளிலல்ல, மனதிலேயே வடிவமைகிறது.
இதயம் இளகினால்தான் வறுமையை ஒழிக்கும் வழி பிறக்கும்.
28. ஒரு நாளென்பது எல்லார்க்கும் பொதுவென்றாலும் அதுவே
சுறுசுறுப்பானவனுக்கும் சோம்பேறிக்கும் வித்தியாசப்படுகின்றது.
29. கணனியால் உலகம் கைக்குள் வந்தும் அறிவின் தேடல்
குறையவில்லை. தாகந்தீரத் தீர ஓடும் வேகம் கூடுகின்றது.
30. ஆத்மீகம் ஒரு மாதுளை. அதன் முத்தான வித்தில் சத்துண்டு.
தோலிலும் மருந்துண்டு.
31. வயதேறத் துவங்குகையில் மகிழ்வூட்டும் பிறந்த நாள் வயதேறி
வருகையில் பயமூட்டுகின்றதை மறைத்து முறுவலிப்பவர்களே
முதிய மனிதர்கள்.
32.; கடவுளுக்குக் காணிக்கை செலுத்தி;த் தங்களுக்கு ஏற்ப
காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்று மக்கள் நம்பும்
வரைக்கும் கடவுளிடம் ஏமாற வேண்டியதுதான்.
33. தேவையில்லாததை அளவுக்கதிகமாகச் சேர்ப்பது குப்பைத்
தொட்டி. தேவைக்குமேல் சேர்த்து அதில் அமிழ்பவன் பணக்காரன்.
34. ஒரு நல்ல விளக்கிருந்தால் காரிருளை வென்றிடலாம். ஒரு
நேர்மையான, நல்ல உறவிருந்தால் துன்பத்திலும் மகிழ்வோடு
வாழ்ந்திடலாம்.
35. அர்த்தமின்றிப் புகழ்கிறவர் அடிக்கடி நம் அருகில் வந்தால்
ஆபத்து நெருங்குகின்றதென்று பொருள்.
36. அளவாக இருவார்த்தை அறிவோடு பேசினால் அறிவான பல
மாந்தர் நட்புக்கு அது உறுதி. அளவுக்கு அதிகமாய் உதடுகளை
விரித்தால் அருகில் வருபவர்கள் அகன்றோடுவது உறுதி.
37. பணம் தேட மட்டும்நீ தொழிலுக்கு ஓடினால் வாழ்வின் சுவை
கெட்டுப் போகும். மனம்ஈடு படும்வண்ணம் தொழில் தேடி ஓடினால்
வாழ்வின் வழி உயர்ச்சி காணும்.
38. பத்தும் பத்தும் சேர்ந்தாலும் பூச்சியம் ஒன்றாய்த் தானிருக்கும்.
அதுபோல சரியான இலட்சியத்தைப் பற்றி நிற்பாரின் பன்மையும்
ஒருமையாய்த்தானிருக்கும்.
39. பழிவாங்கும் எண்ணம் நம் உள்ளத்தில் வந்தால் முடிவெடுப்பதை
உடனடியாகவே ஒத்தி வைப்பது நல்லது. காரணம், அவ்வுணர்வு
பிழைகளைச் சரிபோலக் காட்டவல்லதாகும் என்பதுதான்.
40. கோழைக்கு இருட்டினைக் கண்டாலே பயம் வரும். அதனாலே
விளக்குடன் போ. ஏழைக்குச் சிறுஉதவி என்றாலும் பயன்தரும்.
அதனால்நல் இதயத்துடன் போ.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக