சனி, 15 ஜூன், 2013

சிந்தனைக் கூறுகாய் 17






161.உடலிலே தொடங்கி உடலதில் இணைந்தும் உயிரின்றி இருப்பது? காமம்.
       உடலிலே தொடங்கி உள்ளத்தில் இணைந்து உயிரோடு கலப்பது காதல்

162.வாழ்வதன் அர்த்தத்தை வழங்கிடும் தூயதோர் இலக்கணம் ஆகும் காதல்
       வாழ்வதன் அடிப்படைக் குதவாது போகையில் அர்த்தமே அற்றுப்போகும்

163  அடுத்தவர்க்குதவிடும் நற்பண்பைக் குழந்தைகள் உள்ளத்தில்                      
         ஊட்ட  வேண்டும்
         கெடுப்பவர் நல்வேடம் பற்றியும் புரியும்வண் சரியாகக் காட்ட வேண்டும்

164.அநியாயம் செய்பவர் கைகட்குத் தீயவர்ஆயுதம் தற்காலிக பலம் தரலாம்
       அநியாயம் அதனாலே வெல்லாது அடிபட்டு அழிவுறல் நிச்சயம் எனச்             சொலலாம்

165.போர்வீரர் எனப்போர்வை போர்த்திட்ட போலியர் போர்முனை நின்று              வெல்லார்
யார்யாரோஅப்பாவி எனத்தேடி அவர்கொன்று போர்வென்றோம் எனப் புகல்வார்

166.பொதுமக்கள் உரிமையைப் பறித்ததில் ஆள்பவன் ஆட்சியொரு சாபக்கேடு
      அதுகண்டும் அவன் பின்னே அணிதிரள் கூட்டமோ மனிதத்தின் பாவக்கூடு

167.துறவியும் மனிதனே மனப்பல வீனனே என்பதை மறந்து செல்லின்
       திறமையாய் ஆண்டவன் பெயரிலே அவன்பிழை செய்தலைத் தடுத்தலென்று?

168.பாவத்தால் உயரவே முயலுவன் தண்டனை காலத்தால் அவனைச் சேரும்
      ஆபத்து சூழினும் அதிராதநீதிசார் மக்களைத் தவறாது வெற்றி சேரும்

169.வெல்லாமல்நீதியை அடக்கிடும் தீயவர் இறுதியில் விழுந்திடல்தான்
எல்லாரும் இறுதியில் கண்டவோர் உண்மையாய் வரலாறு சொல்லுதையா!

170. வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காகவே தீமைசெய் மனிதர்கள்தம்
குணமற்ற நிலையதால் உயிர்வாழும் மனிதவுரு விலங்குகள் மட்டுமேதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக