செவ்வாய், 18 ஜூன், 2013

சும்மா சில வரிகள் 1





1.  பத்து மலர்ச் செடிகளுக்கு நடுவிலும் ஒரு வாழை அதிக பலன் தரும்.
   பத்து பணக்காரர்கள் நடுவிலே ஒரு நன்னடைத்தையுள்ளவனால்
   அதிக நன்மை கிடைக்கும்.

2.  நட்புறவை அதிகம் வளர்ப்பது உறவு. நண்பர்களை அளவாய்த்
 தெரிவது அறிவு. நுண்பரைச் சரியாய் உணர்த்துவது அனுபவம்.

3.  தனித்தே பெருகுதல் மரங்களின் இயற்கை. இணைந்தே பெருகுதல்
 மனிதரின் இயற்கை.

4. காண்பதை நம்புபவன் பாமரன். காரணத்தை உணர்பவன் அறிஞன்.
  கேட்பதை ஏற்பவன் பாமரன்.கேட்டதில் தக்கதை ஏற்பவன் அறிஞன்.

5. அயல் வீட்டு விருந்தின் சுவையை விடவும், சொந்த வீட்டின்
  சாதாரண உணவே நிரந்தர சுவையைக் கொண்டதாக இருக்கும்.

6. நாலிலிருந்து நாற்பதுவரை நூல்களும் நாற்பதன் பின் 
  அனுபவங்களும் மனிதர்களின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாவர்.

7. கடலில் முத்தும் உண்டு கால் பறிக்கும் விலங்கும் உண்டு.
  சூழலிலும் அப்படித்தான்.

8. சக்திக்கு மீறிய துன்பங்கள் இறைவன் தருவனவல்ல, நாமே
  இழுத்துக் கொள்வன.

9. மூவேளை உணவை ஒன்றாய் உண்ணலும் எல்லாம் அறிந்து
  முழுமையுறுதலும் இயலாமையினால் ஏமாற நிற்கும் மனித
  பலவீனத்தின் அடையாளங்களாகும்

10. இதயத்தை சுத்தமாக வைத்திருக்காத காரணத்தால்தான்  
   இறைவனை ஆலயங்களில் தேடி ஓட வேண்டிய தேவை
   மனிதர்களுக்கு ஏற்படுகின்றது.

11. மதங்களின் அடிப்படை உட்செய்தி ஒன்றுதானென்று உணராத
   வரைக்கும் மதபேத மோதல்கள் ஒழிய மாட்டா.

12. வாசித்தல் நல்ல பழக்கம். நல்லவற்றைத் தேடி வாசித்தல் மிக 
   நல்ல பழக்கம். நட்புறவு நல்ல பழக்கம். நல்லவர்களுடன் நட்புறவு
   மிக நல்ல பழக்கம்.

13. கடினப்பட்டு உருவாக்கிய பத்திரிகையைக் கண்டபடி
   விமர்சிப்பவர்கள் கண்ணுள்ள குருடர்களே!

14. உழைப்பை மதிக்க உயர்ந்த உள்ளம் வேண்டும் என்பதையே 
   அதில் தோல்வியுறுபவர்கள் பாடமாக உணர்த்துகின்றார்கள்.

15. நமக்கு வேண்டியவர்களின் குற்றங்களைப் பொறுப்பது சரியென்றால்
   வேணடாதவர்ளின் பிழையை பொறுக்க மறுப்பதில் நியாயமில்லை.

16. நீதிக்குத் துணிவு அழகு. துணிவுக்குச் சாதனை அழகு. அறிவுக்கு
   ஆற்றல் அழகு. ஆற்றலுக்கு விவேகம் அழகு.

17. பாட்டு இசையின்றி எடுபடாது. நற்கருத்து உண்மையின்றேல்
   எடுபடாது.

18. முத்தின் பெறுமதி நகையினில் தெரியும். நட்பின் பெறுமதி
   கஷ்டத்தில் புரியும்.

19. பணத்தினால் விளையாத நல்லவைகள் நல்ல வழிகாட்டலில்
   விளைவதுண்டு.

20. கருமிகள் சேர் செல்வம் கண்டவர்களிடமும் உழைப்பவர் செல்வம்
   உரியவர்களிடமும் அடைதலே வினைப்பயனாகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக