ஞாயிறு, 31 மார்ச், 2013

கூடாத கூட்டங்கள் கூட வேணாம்! கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்!






வானத்திலேருக்கிற நட்சத்திரத்தைத்தான் இங்கிலீசுக்காரங்க இஸ்டாரு அப்புடீம்பாங்க. ஆனா இந்த சினிமாக்காரங்களையும் இஸ்டாருங்கிறாங்களே அது ஏன்? அப்புடீன்னு நான் மாசக்கணக்கா என் மூளையைப் போட்டுக் கொழப்பிட்டே இருந்தேன்.

 பதிலே கெடைக்கல்லே. அப்பாக்கிட்டே அதைப்பத்திக் கேக்கப் போனா “ஏண்டா ஒனக்கு அது?“ன்னு என்னையே திருப்பிக் கேட்டுட்டு தப்பிச்சோடிருவாரு. அந்தாளுக்கு வெவரம் போறாதுன்னு அடிக்கடி எல்லாருமே சொல்லிக்குவாங்கல்லியா? கேட்டிருக்கேனே!

 பொதுவா  மனுசன் கிட்டே இருக்கிற பலவீனம் என்னதுன்னா…எதையும் சட்டுபுட்டுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிறதுக்கு தயங்கிக் கிட்டே இருக்கிறதுதான். எல்லாருமே அநேகமா தங்களை எல்லாந் தெரிஞ்ச மேதாவிங்கன்னு காட்டிக்கிறதுக்குத்தான் அதிகமா அலட்டிக்கிறாங்களே தவிர, தெரியலைன்னு காட்டிக்கிறாங்களே இல்லை. ஏன்னா, அதனாலே அவங்க மவிசு கொஞ்சம் கொறைஞ்சி போயிடும்னு நெனைக்கிறாங்க. இது பெரிய தப்புங்க.

 கேக்கத் தயங்குறவன் முட்டாள்னு செர்மனி டிவியிலே கொழைந்தைங்க சீரியல் காட்டப்ப ஒரு பாட்டே போடுறாங்களாம்.

எதையும் கேட்டுக்கிட்டாத்தான் தெரிஞ்சிக்கிடலாம்.      தெரிஞ்சிக்கிட்டாத்தான் படிச்சிக்கிடலாம்.                                 படிச்சிக்கிட்டாத்தான் புடிச்சிக்கிடலாம்.                                            புடிச்சிக்கிட்டாத்தான் ஒசந்துக்கிடலாம்.       இல்லீங்களா?

 நானு மெதுவா என் அம்மா கிட்டே போய் கேட்டேன். அவங்க சிரிச்சாங்க. „எலே அப்பாசாமி, ஒனக்கு இப்பவே சினிமா இஸ்டாரு ஆவுறதுக்கு ஆசை வந்திடுச்சா?“ அப்புடீன்னுட்டு,

 „ போய் பாட்டி கிட்டே கேளு. அவுகதான் படிச்சவுக. எதையும் சரியா சொல்லிக் குடுக்க அவுகளாலேதான் முடியும். போ“ இன்னாக.

அட, நம்ம பாட்டி இருக்கச்சே மத்தவங்களைப் பத்தியெல்லாம் யோசிச்சி டைம்மை வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு அப்பத்தான் என் மூளையிலே தட்டிச்சிது.

ஒடனே பாட்டி கிட்டே ஓடினேன். மொதல்ல.. கொஞ்சம் ஐஸ் வைப்போம்.

„ பாட்டி, பாட்டி நீங்க ஒரு இஸ்டாரு“

அதைக் கேட்டதும் பாட்டிக்கே கொஞ்ச வயசுப் பொண்ணுகளோடே ரெண்டாம் குணம் அதான் நாணம் வந்துட்டுது.  வெக்கப்பட்டுட்டாக.

நம்ம சிவாசி மவன் பெரபு சிரிச்சதும் வெக்கி நெளியிற குசுப்பு மாதிரி வளைஞ்சிக்கிட்டே…

„ என்னடா சொல்றே நீ அப்பாசாமி? நானு  இஸ்டாரா? நக்கலா அடிக்கிறே?“ அப்புடீன்னு கொழைஞ்சாக.

கெழடுக்கும் புகழாசை இருக்கும்னு புரிஞ்சுது எனக்கு. மெதுவா என் சந்தேகத்தை எடுத்துப் போட்டேன்.

 கெழவி கம்பூட்டர் மாதிரி டக்குன்னு சொன்னாக.

„மேலே அண்ணாந்து பாக்க வைச்சாத்தான் எதுக்கும்  மவுசு இருக்குன்னு அர்த்தம். நட்சத்திரத்தை அண்ணாந்துதான் பாக்கணும். சினிமாக்காரங்களும் தெரையிலே மேலேதான் இருந்து நம்மையெல்லாம் அண்ணாந்து பாக்க வைக்கிறாங்க. அது மட்டுமில்லே ஏங்கவும் வைக்கிறாங்க. புரியுதாடா?“

இனியும் புரியல்லேன்னா பாட்டி என்னையும் அப்பாரு மாதிரின்னு சொல்லிப்புடலாமில்லியா? அதனாலே புரிஞ்சிட்டுதுன்னு சொல்லிப்புட்டு ஓடிப் போயிட்டேன்.

                                                               .........................

ஒரு வாட்டி எங்க பக்கத்து வூட்டுப் பனியம்மா பாட்டியோடே பேசிட்டிருக்கச்சிலே என்னதுக்காகவோ „ எப்பவுமே நாலு பேரு கூட்டு சேர்ந்தாக்கா வம்புதான் வரும்“ னு என் பாட்டி சொன்னாக.

நான் கேட்டேன் „ஏம்பாட்டி நாலு பேரு சேந்தாத்தானே வம்புங்கிறீங்க. அஞ்சு பேரோ ஆறு பேரோ சேந்தா வம்பே வராதா?“

பொக்கு பொக்கு பொக்குன்னு பாட்டி குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சாக. அவுக காதிலேருந்த பாம்படம் ஆடி ஆடிக் குலுங்கிச்சுது.

„அடேய் அப்பாசாமி. ஓன் அப்பாவை அப்புடியே உரிச்சி வச்சிரிக்கேடா? அவனுக்கும் மூளையில்லே. ஒனக்கும் மூளையில்லே. முட்டாப் பய மவனே!“

எனக்கு கறுப்புத்துண்டு தோளிலே இல்லாமலே சுருக்குன்னு சுயமருவாதி ஒணர்வு குத்திச்சிது. ஆனாலும் பாட்டி சிரிச்சதைப் பாத்ததும் கோபம் வரலை. நானும் சும்மா சிரிச்சிக்கிட்டேன்.

அம்மா குசினிக்குள்ளாற இருந்துக்கிட்டு, „இந்தக் கெழவிக்கி எப்பவுமே ஊர் வம்பையெல்லாம் வலிய இழுத்துக்கிற வேலைதான்“ னு முணுங்கினது கேட்டுது.

ஆனா பாட்டிக் கெழவிக்கு அறிவும் அனுபவமும் அதிகம்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும்கிறதாலே ஏதாச்சும் நாயம் இல்லாமே பாட்டி பேசாதுங்கிறதும் அவுகளுக்கு தெரிஞ்சுதானிருந்திச்சுது. பொறவு பாட்டி நாலுபேருங்கிறது வெவரம் இல்லாமே, சும்மா கூட்டம் சேர்றதைத்தான்னு வெவரமா சொன்னாக. புரிஞ்சிக்கிட்டேன்.

எனக்கும் நாலைஞ்சு பேர் கூட்டாளிங்க இருந்தாங்க. இருந்தாலும் லேசில வம்பு வந்த மாதிரி தெரியலை. ஒரே ஒத்துமை. அதாலே என்னாலே பாட்டி சொன்னதை முழுக்கவும் சரிதான்னு ஏத்துக்க முடியலை. ஓத்துமையா சண்டை போட்டுக்காமே சிரிச்சிட்டே இருந்தா ஏன் சண்டை வருது? வம்பு வருது?  என்னாலே நம்ப முடியலை.


                                                                ..............................

ஒரு நாள் நானும் எங் கூட்டாளிங்களுமா சேந்து சுப்புப் பாட்டிக்கிட்டே சுடச்சுட வடை வாங்கித் தின்னுக்கிட்டே பேசிட்டிருந்தோம். திடீர்னு அண்ணா புட்பால் சங்கம்னு ஒண்ணை ஆரம்பிச்சா என்னான்னு ஒரு ஐடியா பொறந்துது. உடனே அதுக்காவ திட்டம் போட்டோம்.


ஐடியா என்னமோ அருமையாத்தான் பட்டுது. ஆனா அந்த ஐடியாவை பாட்டிக்கிட்ட சொல்றதா அம்மாகிட்டே சொல்றதான்னு ஒரே ரோசனை எனக்கு. ஏன்னா சங்கம் வச்சப்புறம் லெட்டர் பேடொண்ணு அச்சடிச்சு எல்லாரோடே பேரையும் போட்டுக்கலாம். பதவி கெடைச்ச மாதிர இருக்கும். வீரகேசரி பேப்பர்லே அதை செய்தியா போடுறக்குன்னு எங்க அடுத்த தெரு ரிப்போட்டர் மாமா பிச்சையா கிட்டே குடுத்தா அவரே ஒடனே வால் தலை எல்லாம் வைச்சு எழுதி செய்தியாப் போட்டுடுவார். பொறவு பெரிசா பேர் வந்துடும். ஆனா…. கதை மாறி எதாச்சும் வம்பு தும்பும்புன்னு வந்துட்டுதுன்னா பாதுகாப்பு வேணாம்? அதுக்காவத்தான் நானு அப்புடி யோசிச்சிட்டிருந்தேன்.

ஏன்னா… என் தாத்தா ஒரு வாட்டி என் அப்பாகிட்டே எதுக்காவவோ சொன்னாரு: “ எலே மாடசாமி! எதையுமே செய்றதுக்குத் தொடங்குறதுக்கு முன்னாடி நல்லா ரோசிச்சிப் பாத்துக்க. பின்னாலே என்ன வரும்னு ரோசிக்காமே சட்டுப்புட்டுனு எதையாச்சும் செஞ்சியோ…? அம்புடுதான்.

ஓனக்கு நெனைவிருக்கா? ரோசனையே பண்ணிக்காமே காலிலே ரப்பர் சிலிப்பரு செருப்பை மாட்டிக்கிட்டு, நம்ம ராமையா எண்ணைக் கடைக்கி முன்னாடி தீவாளி அன்னிக்கி  டுவிசு டான்சு ஆடப்போயி, காஞ்ச எண்ணெய்யிலே பொதக்குன்னு கால் வழுக்கிக் கீழே உழுந்துட்டு, பொறவு சிலிப்பரையும் அறுத்துக்கிட்டு, ஆரை, எப்புடி குத்தவாளிங்கிறதுன்னு தெரியாமே தவிச்சானில்லே ஒன் பெரியப்பா முனுசாமி? அது மாதிரித்தான் நீயும் தடுமாற வேண்டி வரும். சாக்கிரதை” அப்புடீன்னாரு.

இந்த முனுசாமித் தாத்தா ஒரு படுகெழம். தொண்ணூறு வயசு வரைக்கும் அச்சு தேஞ்ச மாட்டு வண்டியாட்டம் இழுஇழுன்னு உசிரை இழுத்திட்டே இருந்திட்டு, நானு பொறக்குறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி குழிக்குள்ளாற பூந்து ஆண்டவனை தேடிக்கிட்டு போயிட்டவருன்னுதான் எனக்குத் தெரியும். பட்டாசு போட்டுப் போட்டு எடுத்திட்டுப் போயி கொண்டாடிக்கிட்டுத்தான் பொதைச்சாங்களாம். எல்லாருக்கும் „ அப்பாடா, தொணதொணப்பு போச்சே“ன்னு ஒரே சந்தோசம் போல.

எனக்கு அவரப் பத்தி வேறே எதுவுமே வெவரமா  தெரியாது. ஆனாலும் ஏதாச்சும் ஒரு சம்பவத்திலேருந்து பாடம் படிச்சிக்கிறதுக்கு வழி கெடைக்கும்னா அது நல்லதுதானேன்னு நானும் அவதானமா தாத்தா சொல்றதைக் கேட்டுட்டிருந்தேன்.

அப்பத்தான் தாத்தா ஒரு பெரிய பழமொழிய சினிமா டாக்கீஸ் போஸ்டரை சைவக்கடை செவுத்திலேருந்து உரிக்கிற மாதிரி பரபரன்னு மூளையிலேருந்து உரிச்சி எடுத்து உட்டாரு. “எலே மாடசாமி! வருமுன் காப்போன் மதியூகின்னு ஒரு பழமொழி இருக்குதே! அது ஓனக்குத் தெரியுமாடா?”

என் அப்பாரு மொதல்லே வாயைத் தொறக்காமே தலையை சொறிஞ்சாரு. கொஞ்சம் பொறுத்து, வாயைத் தொறந்தாரு. வெத்தலக் காவி படிஞ்ச பல்லெல்லாம் என்னமோ பூமி நடுக்கத்திலே இடிஞ்சு உழுந்து கெடக்கிற பில்டிங் துண்டுங்க மாதிரி அவரு ஈஈஈன்னு இளிச்சப்போ ஒரே மேடு பள்ளமா, ஒரே இருட்டா மட்டும் தெரிஞ்சுது.

தாத்தாவுக்கு வாலிலே மிதிபட்ட பூனைக்குட்டியாட்டம் பெரிய கோவம் வந்திட்டுது. ஒரே சத்தமா கத்தினாரு. “ஏண்டா டேய்! நாலாங் கிளாசு வரைக்கும் நல்லாத்தானேடா  படிச்சிருக்க? அவ்வளவு நாளும் இதப்பத்தி ஒன் வாத்தியாரு ஒனக்கு ஒண்ணுமே சொல்லிக் குடுக்கலையா?”

அப்பா டக்குன்னு சொன்னாரு: “ அப்பா அவருக்கு ஒங்களவுக்கு அறிவு இருந்திருந்தாத்தானே சொல்லிக் குடுக்க முடியும்? அவருக்கு அடிக்கடி வெத்தல போடவும் சைடுக்குப் போயி பீடி அடிக்கவும்தானே ரொம்ப நேரம் தேவையாயிருந்துது. படிச்சா குடுத்தாரு அவரு? சும்ம்ம்ம்மா தம்முதானே அடிச்சிட்டிருந்தாரு”

தாத்தாவுக்கு தன்னோடே மவனே தனக்கு அறிவாளின்னு சட்டிப்பிகேட்டு குடுத்திட்ட மாதிரி ஒரு பெருமை. சிரிச்சுக்கிட்டே கேட்டாரு. “ மதியூகின்னா என்னான்னாவது தெரியுமா ஒனக்கு?”

அப்பா திரும்பவும் தலையச் சொறிஞ்சாரு.

“எலே தெரியல்லேன்னா டபக்குன்னு சொல்லிடணும். அத உட்டுட்டு சும்மா பேன், கரப்பாம்பூச்சி கடிக்கிற மாதிரி சொறியிற சொறிச்சல் வேலை வேணாம்”

“சரீப்பா”

அப்பாவோட இடிஞ்ச பல்லு திரும்பவும் தெரிய ஆரம்பிச்சுது. அதான் அசடா இளிச்சாரு.

தாத்தா சொன்னாரு:

“மாடசாமி! மதியூகின்னா அறிவாளின்னு அர்த்தம். எதுவுமே வர்றதுக்கு முன்னாடியே எச்சரிக்கையா நடந்துக்கணும். அப்புடி சரியா ரோசிச்சி நடந்துக்கிறவன்தான் அறிவாளின்னு அருத்தம். அப்படியில்லேன்னா....”

“ நானுன்னு அருத்தம்”
அப்பா முடிச்சாரு. தாத்தா லொபக்கு லொபக்குன்னு சிரிச்சாரு.

“மடப்பயலே!”

இப்ப நானு அதைத்தான் நெனைச்சுப் பாத்தேன். நாமளும் சங்கத்தை தொவக்கிறதுக்கு முன்னாடி மதியூகியா நடந்துக்கிடணுமில்லியா?

அன்னிக்கி சாயங்காலமா நைஸ்ஸா… அம்மா கிட்டே மெதுவாப் போனேன். அவங்க டின்னருக்கு என்னமோ சமைச்சுக்கிட்டு இருந்தாக.

“அம்மா... நாங்க ஒரு புட்டுபால் சங்கம் தொடங்கப் போறோம்மா? அண்ணா புட்டுபால் கிளப்னா நல்லாருக்குமா அண்ணா புட்டுபால் சங்கம்னா நல்லாருக்குமா?”

அம்புட்டுதான்!
கீரியை வெறட்ற பாம்பு மாதிரி அம்மா „சுர்ர்ர்ர்“னு சீறிப்புட்டாக.

“எலே சும்மா பாடம் படிக்காமே பந்தடிச்சிப் பெயிலாவவா திட்டம் போடறே? பேசாமே பந்தைத் தூக்கி மொதல்ல பொந்துக்குள்ளே போட்டுட்டு ஒழுங்காப் படி. படிச்சதுக்கப்புறமா பந்தடிக்கிறதை பாத்துக்கலாம்.”

எனக்கு சப்புன்னு ஆயிட்டுது. இந்தம்மா என்னா ஏதுன்னு வெவரம் கேட்டு நம்மள உற்சாகப்படுத்துவாகன்னு நெனச்சிப்போனா இப்புடிச் சொல்லிட்டாகளே!” அப்புடீன்னு ஒரே கவலையாயிருந்துது.

இவுகளுக்கு பாட்டி தேவலை. அவுககிட்டே போவோம்னு நெனச்சிக்கிட்டு மெதுவா வாசலுக்கு…. அவுக பக்கமா நவந்தேன்.

பாட்டி வெத்தலக் கொழவியிலே டக்கு டக்குன்னு பாக்கு போட்டு இடிச்சிட்டிருந்தாக. பக்குவமா கிட்டே போயி பாட்டி கிட்டேருந்து கொழவிய நான் வாங்கி இடிச்சேன்.

கெழவிக்கி என்னமோ புரிஞ்சிட்டுது. “என்னடா அப்பாசாமி! ஏதாச்சும் சில்லறை கில்லறைக்கி அடிபோடுறியா?”

சீ! என்னா ஒலகம் இது? எதுக்கெடுத்தாலும் ஒரே லஞ்சம் ஊழல்னு எல்லா எடமும் பரவிக் கெடக்கிற சனியன் இப்போ நம்ம வூட்டுக்குள்ளாறவும் வந்திட்ட மாதிரி இருக்கே!“ ன்னு கோவம் வந்துது எனக்கு.

இருந்தாலும்… இப்ப காரியம் நடக்கணுமே! அதுக்காக பொறுமையா அரசியல்காரங்களைப் போல பொறுமையா இருந்துக்கிட்டேன்.

“இல்லே பாட்டி! வந்து....நாங்க ஒரு புடடு பால் சங்கம் தொவங்கலாம்னு நெனைக்கிறோம். அதான் ஒங்க ஐடியாவையும் ஒத்துழைப்பையும் கேக்க வந்தேன்”

பாட்டி ஒரு வாட்டி நம்ம கே.ஆர். விஜயா மாதிரி சிரிச்சாக. ஒரு வித்தியாசம். அந்தம்மா சிரிச்சா வெள்ள வெளேர்னு பல்லு வரிசையா அழகாத் தெரியும். எம் பாட்டி சிரிச்சப்போ ஒரு பெரிய கொகை மாதிரி இருந்திச்சி. அம்புடுதான்”

ரெண்டு செக்கண்டு கழிச்சு பாட்டி கேட்டாக:

“எலே அப்பாசாமி! யார் யாரெல்லாம் ஒங்க சங்கத்திலே இருக்கீங்க?”
அட பாட்டி நம்ம கைக்குள்ள வந்துட்டாக போலிருக்கே!

“ நம்ம ராமசாமி  சின்னசாமி அருமைசாமி முத்துசாமி கண்ணுசாமி அந்தோனிசாமி  கருணைசாமி, நானு….”


“எலே எலே போறும்டா. எல்லாருமே சாமிங்கன்னா அது ஆண்டிங்க கூடி கட்டுற மடம் மாதிரித்தாண்டா இருக்கும். ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க: கூடாத கூட்டங்கள் கூட வேணாம். கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்”

இதென்னடாது! கெழவி ஒரே ணாம்ணாம்னு பாட்டுப் பாடுது?
எனக்குப் புரியலை.

பாட்டி சிரிச்சிக்கிட்டே சொன்னாக: அடேய் திட்டம் போட்றது பெரிசில்லே. அதை சரியா  செம்மையா செய்யவும் வேணும். மொதல்ல வேணும்னா எல்லாருமா சேந்து காசு சேத்து ஒரு பந்தை வாங்கிக்கிட்டு வெளையாடுங்க. அதுக்கப்புறமா பாத்து சங்கம் போடுங்க. ஏன்னா.... எதையும் தொவங்கச்சிலே கூடுற கூட்டம் தொடர்ந்து இருக்கும்னு நம்ப முடியாது. சொல்லிப்புட்டேன்”

எனக்கு சப்புன்னு ஆயிட்டுது. இருந்தாலும் அடுத்த நாள் எல்லாரும் சந்திச்சப்போ ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு மொதல்ல ஒரு புதுப் பந்து வாங்குவோம்னு பாட்டியோட ஐடியாவை  எனது ஐடியாவாச் சொன்னேன்.

அப்பத்தான் தெரிஞ்சிது எல்லாப் பயலுவளுமே சும்மா ஓசியிலே வெளையாடற படுவாக்கள்னு. ஓரு பயலுமே காசு தர முன்வரலை. “ அடேய் அப்பாசாமி, நீ ஒன் அப்பாரு கிட்டே கேட்டு மொதல்ல பந்தை வாங்கு. பின்னாடி நாங்க கொஞ்சம் கொஞ்சமா தர்றோம்”னு கதை உட்டானுவ. நான் என் தாத்தாவை நெனைச்சுக்கிட்டேன். வருமுன் காத்துக்கணும். அப்பத்தான் நாமளும் அறிவாளின்னு ஒரு வாட்டி எனக்குள்ளாற நெனைச்சிக்கிட்டேன். அதுக்கப்புறம் புட்பால் கிளப் அப்புடீயே சுனாமியிலே பொதைஞ்சு போன சட்டி பானையாட்டம் பொதைஞ்சி போச்சுது.

இப்ப வளந்து பெரிய மனுசனாகி வெளிநாட்டுக்கும் வந்தப்புறம்தான் பழைய கால புத்தியிருக்கிற அதே சனங்க இங்கேயும் அப்புடியே இருக்கிறது தெரியுது.

எல்லா எடத்திலேயும் சங்கம்னு ஒண்ணை தொவங்குறதுக்குன்னே ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்குது. உள்ளாற ஒரு ஐடியாவோடே ஸ்டாட் பண்ணுவாங்க. ஆனா ஊருக்கு உபதேசமும் சேவையும் செய்றதுக்குன்னுதான் ஒண்ணுக்கு இருந்து முன்னுக்கு வருவோம்னு சங்கம் போடுறோம்னு சொல்லிக்குவாங்க.

பொறவு பாத்தா படிப்படியா, உருப்படியானவங்கள்ளாம்  கழந்துடுவாங்க. அவங்களா கழறல்லேன்னா இவங்களே பெரேரணை அது இதுன்னு அவங்களுக்கு எதிரா எடுத்துவுட்டு, கழட்டிப்புடுவாங்க.

கடைசியிலே கொஞ்சம் மிச்ச சொச்சங்க மட்டும் கொடி புடிச்சிக்கிட்டே சங்கம் நடத்தும்.

மனசார சேவைன்னு இல்லாமே அவனவன் தன்னை வளக்க மட்டும் பக்குவமா சதி செய்திட்டே இருப்பான்.

எனக்கென்னமோ இதுகளுக்குள்ளாற புவுந்துகிட்டு அப்புறம் எறும்புக் குழிக்குள்ளே கையை உட்டுட்டு, சொறியிற வேலை அனாவசியம்னு பட்றதாலே ஒதுங்கி இருந்துக்குவேன். ஆனா அதுக்காவ நல்ல சங்கமே இல்லேன்னும் அர்த்தமில்லே.

கருவாட்டுக் கடையிலே துணி வித்தா எப்புடி இருக்கும்? கருவாடும் நாத்தமடிக்கும். அதுக்குள்ளே இருக்கிறதாலே துணியும் நாறும். இல்லீங்களா?

இதை வச்சுத்தான் நம்மாளுங்க நம்மை எச்சரிச்சு „கூடாத கூட்டங்கள் கூட வேணாம். கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்“ அப்புடீன்னு சொல்லியிருக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்.

நல்ல நண்பர்கள்னும் கெட்ட நண்பர்கள்னும் ரெண்டு கிளாஸ் இருக்கிறதை நாம மறந்திடக் கூடாதுங்க. ஏன்னா நல்ல நண்பர்கள் கெடைக்கிறதுங்கிறது ஒரு அதிர்ஸ்டம் பாருங்க.

தன்னோடே நண்பனுக்காக நல்லதை நெனைக்கிற எவராவது இருந்தா அவங்க இருக்கிற எடத்திலே தெய்வம் இருக்குன்னு நம்பிக்கலாம். „கடவுள் இல்லே! கடவுள் இல்லே“ன்னு கத்துறாங்களே, அது ஏன்னு புரிஞ்சிருக்குமே!

ஒங்களோடே கூட்டாளின்னுக்கிட்டு யாராவது ஒட்டிக்க வந்தாங்கன்னா „டக்“குன்னு நம்பிடாதீங்க. நல்லாருக்கச்சிலே பாசமா நடக்கிறவங்க ஒங்களுக்கு ஏதாச்சும் எடைஞ்சலோ துன்பமோ பொருளாதாரக் கஷ்டமோ வரும் நேரத்திலே எப்படி நடந்துக்கிறாங்கன்னு அவதானமா பார்த்துக்குங்க.

பக்குவமாக சாட்டு சொல்லித் தப்பிக்கிட்டே ஒதவாமே நழுவிக்கிற நைஸ் வியாபாரிங்களும் ஒங்க நெலைமையை புரிஞ்சுக்கிறாத மாதிரி காட்டிக்கிட்டே ஒதுங்கிக்கிற ஓப்புக்காரங்களும் ஒங்க பலம் கொறைஞ்ச நெலைமையை ஊர் பூராவும் பரப்பி விட்டுட்டு, சிரிச்சிக்கிட்டே ஒட்டிட்டிருக்கவங்களும் ஒங்க கூட்டாளிங்க இல்லை.


ஒங்களுக்கு ஒண்ணுண்ணா தனக்கு நடந்தாப்போலே நெனைக்கிறவங்களும் ஏலாமே இருந்தாலும் எப்படியாவது ஒதவ முடியாதான்னு நெனைக்கிறவங்களும் யாரோ அவங்களைத்தான் நம்புங்க.

ஏன்னா செய்றதும் செய்யணும்னு மனசார நெனைக்கிறதும் புண்ணியத்தோடே எலக்கணத்திலே ஒண்ணுதான். நல்லதுகளுக்குத்தான் நல்ல நெனைப்புக்களும் வரும்.                                                                                                
 காத்துக்கு வாசமும் நாத்தமும் சேர்க்கையை பொருத்துத்தான் இல்லீங்களா?

 செலாளுங்க ரொம்பவும் பக்குவமாவும் பவ்வியமாவும் பரிசுத்தமான தேவதைங்களாட்டம் தெறமையா பேசிப் பழகுவாங்க. ஆனா உள்ளாடி வெறும் கருமிசமும் வைராக்கியமும் பகையும்தானிருக்கும். பழகினீங்கன்னா ஏதோ ஒலக சாதனையெல்லாமே அவங்களாலேதான் நடக்கிற மாதிரி கதையடிப்பாங்க. ஆனா அவங்க கிட்டேயே ஒங்களுக்கு இருக்கிற ஒயர்வான ஆசைன்னு எதையாவது சொல்லி ஒதவி செய்யக் கேட்டுப் பாருங்க.

அப்பத்தான் எப்படிப் பக்குவமாவும் தெறமையாவும் அவங்க ஒங்க ஆசையை தட்டிவிட்டு ஒங்களை தடுக்கிறாங்கங்கிறதை நீங்க சரியா அடையாளம் காணுவீங்க. அவங்களை நம்பவே நம்பாமே, ஏதோ அவங்களை நம்பறாப்பலே நீங்களும் சும்மா புது நடிகராட்டம் கொஞ்சம் நடிச்சுப் பாருங்க. அப்பத் தெரியும் அவங்களோடே நெஜமான நெறம். முள்ளை முள்ளாலேயே எடுக்கிற மாதிரித்தான் இதுவும். புரிஞ்சுதா?


நட்பா பழகுறது வேறே, நண்பரா ஏத்துக்கிறது வேறே! ரெண்டுக்கும் டிப்பெரண்ட்டு இருக்குது.

நண்பரா ஏத்துக்கிறதுக்கு முந்தி சந்தேகத்தோடேதான் பழகணும். சரியான ஆளுன்னு கண்டு பிடிச்சி நட்பு வச்சோமோ, அதுக்குப் பின்னாடி சந்தேகமே வரக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. ஏன் தெரியுமா?

ஆளைக் கண்டு மயங்காதே! நம்பவே நம்பாதே! மூளையை சரியா ரோசிக்காமே வித்துட்டமோ நட்பே நஞ்சாயிடும்னு நம்மை எச்சரிச்சு வைக்கத்தான்.

சொந்தம் பந்தம் கூட செல சமயங்களிலே தீப்பந்தங்களாகி விடுறதுண்டு. நல்ல கொணம், நல்ல புத்தி, நல்ல பழக்க வழக்கங்க எல்லாம் நாம எப்பவும் பொடம் போட்டுப் போட்டுப் பாலிஷ்; பண்ணி வைச்சுட்டே வர வேண்டிய வெசயங்கள். சும்மா மேடையிலே பேசிட்டு நடையை மாத்தி நடந்துக்கிற சமாச்சாரங்களில்லை.

எவனாவது பேச்சு வேறே வாழ்க்கை வேறேன்னு இருந்தான்னா, அவன் ஒழுக்கமில்லாத ஆள்னுதான் அர்த்தம். அவனோடே சேர்றதும் அவனைப் போல ஆளுங்களா இருந்தாத்தான் அவங்க தொடர்பு நெலைச்சிருக்கும். ஒரு சாதிப் பறவைகள்தானுங்களே ஒண்ணாப் பறந்து போவும்?

ஆந்தையும் வாத்தும் காக்காவும் புறாவும் ஒண்ணாப் பறந்து என்னிக்காவது பார்த்திருக்கோமா?

யார் கூடயாவது சேரணும்னு நீங்க நெனைச்சா, மொதல்ல ஆளைப் படியுங்க. ஆழந் தெரியாமே காலை உட்டா மூழ்கிச் சாகணும். ஆளையறியாமே சிநேகம் வைச்சா அவதிப் பட்டே ஆவணும்.


நீங்கள்ளாம் என் முனுசாமித் தாத்தா மாதிரி ரோசிக்காமே நம்பி நடந்துட்டுப் பொறவு தடுமாறக் கூடாதேன்னுதான் ஒங்களுக்கு இப்போ இதைச் சொல்லி வைக்கிறேன்.

தயவு செஞ்சி…

கூடாத கூட்டங்கள் கூட வேணாம். (வீணா மனசுக்குள்ளே) கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்.



மறக்க மாட்டீங்கதானே!

போயிட்டு வாறேன்.

அடுத்த வாட்டி சந்திக்கிற வரைக்கும்,

 ஒங்க அப்பாசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக