11. பத்துவிரல் இருப்பினும் பணிக்கேற்ப அவையவை பணிசெய்தல் நியதியாகும்
தரம் உணர்ந் ததற்கேற்ப உழைப்பை அமைப்பதே வெற்றியின் பாதையாகும்.
12. சிரிப்பது எதற்கெனக் கவனித்துக் கணித்தால் சிரிப்பவர் தரம் தெரியும்
ஏறியே புகழதில் நிற்கையில் நடத்தையில் தனிநபர் தரம் புரியும்.
13. உள்ளத்தின் மெய்கள் செயலிலல்ல செய்வோரின் நோக்கத்தில் தான் தெரியும்
வள்ளத்தின் தரமதோ வெள்ளம் இழுக்கையில் வெல்வதில் தான்தெரியும்.
14. கள்ளத்தை மறைத்திடல் இலகுசெயல் என்றைக்கும் இழிமனம் கொண்டவர்க்கே!
கள்ளமில் லாதவர் செய்கின்ற நல்லதும் பிழையென்று செய்வர் அவரே!
15. வெண்சுவர் தன்னிலே கரும்புள்ளி தேடிடின் வெண்சுவர் மறைந்து போகும்
பிழைமட்டும் தேடியே பழிசெய்யும் தீயரால் நல்லெண்ணம் சோர்ந்து போகும்.
16. ஏதாகில் ஒருநன்மை நாளொன்றில் செய்வதென இதயத்தில் உறுதிகொண்டால்
ஏதோ ஒருவிதத்தில் பிறப்பதனின் பெறுமதியை உணர்த்துபவ ராயிருப்போம்.
17. நற்செய்கை செய்பவர் செயல்குறை பேசியே அவர்மீது பழி தொடுப்பார்
பற்றிடும் தீமைசெய் பழியினால் என்றைக்கும் நற்புகழ் சேர்க்க மாட்டார்.
18. அலைக்கஞ்சும் கோழையும் மூடரும் கடல்கேடு என்றுரைப்பார்
ஆன்மீகம் எதற்கென்று உணராத மூடரே ஆலயம் தீது என்பார்.
19. மேடையைக் காட்டி ஆடலை மறுப்பது காட்டுவது ஆடல் இயலார் தகுதி நிலை
முள்ளினைக் காட்டியே ரோசாவை மறுப்பது பிழை சுட்டின் பகைக்கும் நிலை.
20. கடவுளைக் கண்டிட உள்ளத்தின் தூய்மையை இதயத்தில் இருத்திடுக!
கடவுளோ டிணைந்திட அவனது உருவினை அயலனில் தேடிடுக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக