ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கண்ணீரும் கதை எழுதும் (கவிதை)








காலத்தால் சாகாதது எதுவோ அதுவும்
காலத்தால் மாறாதது எதுவோ அதுவும்
காலத்தால் மறக்காதது எதுவோ அதுவும்
காலத்தில் பதிவதே சரித்திரம் ஆகும்


சத்தியம் மறப்பவன் சதிராடும் காலம்
சத்தியம் கொல்பவன் உலகாளும் காலம்
சத்தியம் மறுப்பவன் உலகேய்க்கும் காலம்
சததியம் ஆய்நீதி அழிப்பதாய் மாறும்

பலவீனன் கொள்கையில் பழிசெய்தே வெல்வான்
பலமுள்ளோன் சிலநேரம் கொள்கையால் தோற்பான்
பலம்கொண்ட தீமையின் தொடர்வரும் தோல்வி
பலம்நீதி சார்கையில் சரித்திரம் ஆகும்

கண்ணீரும் செந்நீரும் புதையுண்டு போய்ப்பின்
எண்ணங்க ளில்தட்டிச் சரித்திரம் ஆக்கும்
உண்மையை விழைகின்ற மனிதத்தின் மைந்தர்
திண்மையில் மையாகிச் சரித்திரம் தோற்றும்

காலத்தின் நியதிகள் திசைமாறும் போது
காலத்தில் எதிர்நிலை உருவாக்கம் காணும்
காலத்தில் எதுவெல்லும் எதுதோற்கு மென்னும்
ஞாலத்தின் நியதியில் நீதிதான்  வெல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக